கிருஷ்ணகிரி: பாரூர் பெரிய ஏரி பாசன கால்வாயில் வீசப்படும் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளால் நீர்நிலையின் சூழல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
போச்சம்பள்ளி வட்டம் பாரூரில் உள்ள பெரிய ஏரி மாவட்டத்திலேயே 600 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய ஏரியாகும். கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் இந்த ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரியில் 249 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்க முடியும். இந்த ஏரியின் மூலம் 2,397.42 ஏக்கர் விளை நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகின்றன. தற்போது. ஏரியிலிருந்து 2-ம் போக பாசனத்துக்காகக் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில், கிழக்கு கால்வாய் செட்டியூர் வழியாக பனங்காட்டூர், ஜிங்கல் கதிரம்பட்டி, தாதம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்கிறது.
இந்நிலையில், சிலர் கால்வாயின் கரையில் அமர்ந்து மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்கள் மற்றும் மீதமாகும் உணவுப் பொருட்களைக் கால்வாயில் வீசிச் செல்கின்றனர். இதனால், கால்வாயில் நீர் செல்வதில் தடை ஏற்படுவதோடு, விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், நீர்நிலையின் சூழலை அச்சுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: பனங்காட்டூர், செட்டியூர் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாகச் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோர் பாசன கால்வாய் கரையில் அமர்ந்து மது அருந்திவிட்டு, கால்வாயில் காலி மதுபானம் மற்றும் குளிர்பானம், தண்ணீர் பாட்டில்களை வீசி செல்கின்றனர். இதனால், நீர் மாசடைவதோடு, கால்வாயில் நீர் செல்வதில் தேக்க நிலை ஏற்படும் நிலையுள்ளது. மேலும், உடைந்த பாட்டில் கண்ணாடி துண்டுகள் வயல் வெளிகளில் நீருடன் வருவதால், களை எடுத்தல், பூச்சி மருந்து தெளித்தல், உரமிடுதல் உள்ளிட்ட வேளாண் பணிகள் மேற்கொள்ளும்போது, தொழிலாளர்களின் கால்களில் காயம் ஏற்படும் நிலையுள்ளது.
மேலும், கால்வாயில் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கும் நிலையும், கால்நடைகள் பாதிப்படையும் நிலை நீடிக்கிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்து நடவடிக்கை இல்லை. எனவே, பாரூர் ஏரி கால்வாய் கரையோரங்களில் உட்கார்ந்து மது அருந்துவதைத் தடுக்க நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கால்வாய் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறப்படுமா ?: சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “காலி மதுபாட்டிகளை கண்ட இடங்களில் வீசுவதால் சுற்றுச்சூழல் மற்றும் கால்நடைகள், வன விலங்கள் பாதிப்பைத் தடுக்க டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைத்து ரூ.10 பெறும் திட்டம் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் நீதிமன்ற உத்தரவுப்படி அமல்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்தது. இந்த நடைமுறையைக் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமல்படுத்தி னால், நீர்நிலைகள் உள்ளிட்ட இடங்களில் காலி மதுபாட்டில்களை வீசுவதைக் கட்டுப்படுத்தலாம்” என்றனர்.