ஐபிஎல் 2025 சீசனில் தடுமாறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே. மகாராஷ்டிர மாநிலம் விரார் பகுதியைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே, கடந்த 20ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே அணிக்காக முதல்முறையாக களமிறங்கி 15 பந்துகளில் 32 ரன்களை விளாசி கவனம் ஈர்த்தார்.
முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை விளாசித் தள்ளி பயமறியா இளம் சிங்கமாக கர்ஜித்துள்ளார் ஆயுஷ் மாத்ரே. சிஎஸ்கே அணிக்காக களமிறங்கிய மிக இளம் வயது வீரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் அவர் பிடித்துள்ளார்.
ஆயுஷ் மாத்ரே 17 வயது 278 நாட்களான நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். இதற்கு முன்பு, அபிநவ் முகுந்த் 18 ஆண்டு 139 நாட்களான நிலையில் களமிறங்கிய இளம் சிஎஸ்கே வீரர் என்ற பெயரைப் பெற்றிருந்தார்.
முதல் போட்டியிலேயே தீபக் சாஹர், அஸ்வனி குமாரின் பந்துகளைச் சிதறடித்தார். குறுகிய நேரமே களத்தில் இருந்தபோதும் அனைத்து சிஎஸ்கே ரசிகர்களின் அன்பையும் பெற்றுவிட்டார். அதேநேரத்தில் தன்னை 3-வது வீரராக களமிறக்கிய அணி நிர்வாகத்தின் நம்பிக்கையையும், கேப்டன் எம்.எஸ்.தோனியின் பெயரையும் காப்பாற்றியுள்ளார். இளம் வீரராக இருந்தபோதும், தன்னுடைய சிறந்த பேட்டிங் தொழில்நுட்பத்தால் எளிதாக பந்துவீச்சாளர்களை கையாள்வது அவருக்கு கூடுதல் பலமாக உள்ளது.
‘அஞ்சாத மன உறுதி, அசராத திறன், அற்புதமான பேட்டிங் டெக்னிக் போன்றவைதான் அவரது பலம்’ என்கிறார் மும்பை 19 வயதுக்குட்பட்டோர் அணியின் பயிற்சியாளரான தினேஷ் லாட்.
மேலும் அவர் கூறும்போது, “மிகவும் நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரராக ஆயுஷ் மாத்ரே வருவார். எதையும் நேர்மறையான எண்ணங்களுடன் அணுகி வெற்றியைக் காண்பார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர் விளையாடிய இன்னிங்ஸைப் பார்த்தாலே நமக்குத் தெரியும். ஆயுஷ் மாத்ரேவை மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ரோஹித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் தட்டிக்கொடுத்துப் பாராட்டினர்.
ஆயுஷை 10 வயதிலிருந்தே நான் பார்த்து வருகிறேன். இவர் இப்போது 17 வயதைத் தாண்டியுள்ளார். அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. 10 வயதிலேயே அவருக்குள் ஒளிந்திருக்கும் திறமையைக் கண்டு கொண்டேன்” என்றார்.
வினு மன்கட் கோப்பை, மும்பையில் நடைபெறும் கேஏசிஏ கோப்பை, இரானி கோப்பை, ரஞ்சி கோப்பை, இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி, விஜய் ஹசாரே கோப்பை என பயணித்து தற்போது ஐபிஎல் வரை முன்னேறி விட்டார். மும்பை அணிக்காக அவர் விளையாடிய பல்வேறு ஆட்டங்களைப் பார்த்து அவரை சிஎஸ்கே அணி தேர்வு செய்தது. அவர் இந்திய அணியில் இணையும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று சொல்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.
விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் நாகாலாந்து அணிக்கெதிராக மும்பை அணிக்காக களமிறங்கி 117 பந்துகளில் 181 ரன்களை விளாசியதும் குறிப்பிடத்தக்கது.
ஆயுஷ் மாத்ரேவின் தனிப்பட்ட பயிற்சியாளரான பிரசாந்த் ஷெட்டி கூறும்போது, “ஆயுஷ் மாத்ரே மும்பையில் இருந்து சிறிது தொலைவிலுள்ள நாளா சோபாரா என்ற பகுதியில் இருந்து மும்பைக்கு வந்து பயிற்சி பெற்று செல்வார். அவரது வெற்றிக்கு ஆயுஷின் தந்தையான யோகேஷ் மாத்ரேவும் ஒரு காரணம். தினந்தோறும் சுமார் 6 மணி நேரம் அவர் பயணத்துக்காக மட்டுமே செலவு செய்வார்.
ஆயுஷின் குடும்பம், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது. விரார் பகுதியில்தான் அவர்கள் வசித்து வந்தனர். தற்போது நாளா சோப்ரா பகுதிக்கு மாறிவிட்டனர். யோகேஷ் மாத்ரே தனது மகன் ஆயுஷின் கிரிக்கெட் எதிர்காலத்துக்காக வங்கியில் பணியாற்றிய வேலையை விட்டு விட்டார். தொடர்ந்து மகனின் கனவை நனவாக்க அவருடன் பயணித்து வருகிறார்” என்றார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி, 6-ல் தோல்வியைப் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. அதற்கு ஆயுஷ் மாத்ரேவின் பங்கு பெருமளவில் உதவும் என்று சிஎஸ்கே நிர்வாகத்தினர் நம்புகின்றனர்.