கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் கூத்தாமண்டி பகுதியில் வன எல்லையை ஒட்டி நேற்று முன்தினம் ஒற்றை ஆண் யானை நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. வனச்சரகர் மனோஜ் தலைமையில் வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். ஆனால், சோர்வாக உள்ள யானை அதே பகுதியில் சுற்றித் திரிகிறது. மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின்படி முதலுதவி வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, வனத்துறையினர் கூறும்போது, “சிறுமுகை பெத்திக்குட்டை பகுதியில் சோர்வாக நின்ற ஒற்றை யானைக்கு மருத்துவக் குழுவினர் தர்பூசணி மற்றும் வாழைப் பழம் மூலமாக ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள், குடற்புழு மாத்திரைகள் மற்றும் கல்லீரல் புத்துணர்வு வைட்டமின் டானிக் ஆகியவற்றை வழங்கினர்.
சுமார் 17 வயதுள்ள அந்த யானை மருத்துவ குழுவினர் அளித்த உணவுகளை உட்கொண்டது. யானைக்கு வெளிக் காயங்கள் ஏதும் இல்லை. வனப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரால் யானை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.