சாகுபடி பரப்பு, மகசூல் அதிகரிப்பு மற்றும் சந்தைக்கு வெளி மாநில வரத்து அதிகரிப்பால் ஓசூரில் வெள்ளரிக் காய் விலை சரிந்துள்ளது. ஒரு கிலோ ரூ.7-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், உத்தனப்பள்ளி, பாகலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் கோடை கால நுகர்வுத் தேவையை மையமாகக் கொண்டு 700 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வெள்ளரி சாகுபடி செய்துள்ளனர். கடந்தாண்டு கோடையில் ஒரு கிலோ வெள்ளரிக்காயை வியாபாரிகள் ரூ.50 வரை கொள்முதல் செய்தனர். இதனால், இந்தாண்டு விவசாயிகள் வழக்கத்தை விட 200 ஏக்கர் கூடுதல் பரப்பளவில் வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது வெள்ளரி அறுவடை பணி தீவிரம் அடைந்துள்ளது.
பொதுமக்களும் கோடை வெயில் உக்கிரத்தில் நீர்ச்சத்து மற்றும் மருத்துவ குணம் நிறைந்த வெள்ளரிக்காயைத் தங்களது அன்றாட உணவுத் தேவைக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சந்தையில் வெள்ளரிக்கு நல்ல சந்தை வாய்ப்பும் கிடைத்துள்ளது. அதே நேரம் சாகுபடி பரப்பு, மகசூல் மற்றும் வெளி மாநில வரத்து அதிகரித்துள்ளதால், வியாபாரிகள் ஒரு கிலோ வெள்ளரியை ரூ.7-க்கு கொள்முதல் செய்வதால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஓசூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஓசூர் பகுதியில் சாகுபடி செய்யப்படும் வெள்ளரிக் காய் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்துக்கும் விற்பனைக்குச் செல்கிறது. கடந்தாண்டு ஒரு மூட்டை (30 கிலோ) வெள்ளரி ரூ.800 முதல் ரூ.1,500 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
இந்தாண்டும் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கூடுதல் பரப்பளவில் வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டோம். மேலும், இந்தாண்டு கர்நாடக, ஆந்திர மாநில விவசாயிகளும் வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டனர். வழக்கத்தைவிட மகசூல் அதிகரித்ததோடு, உள்ளூர் சந்தைக்கு வெளிமாநில வெள்ளரி வரத்தும் அதிகரித்துள்ளது.
நுகர்வு தேவையை விட அதிக வரத்துள்ளதால், ஒரு மூட்டை (30 கிலோ) வெள்ளரியை ரூ.200-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால், அறுவடை கூலி, போக்குவரத்து செலவுக்குக் கூட வருவாய் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கூலி ஆட்கள் இல்லாமல் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலம் அறுவடை செய்து, தோட்டங்களில் நேரடியாக விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.