ஈரோடு ஜவுளி வாரச் சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால், மொத்த விற்பனை குறைவாகவும், உள்ளூர் வியாபாரிகளால் சில்லறை விற்பனை அதிகரித்து காணப்பட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளான மணிக் கூண்டு ரோடு, டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், காமராஜர் வீதி, பிருந்தா வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடபெற்று வருகிறது.
இங்கு வாரம்தோறும் திங்கட்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க் கிழமை இரவு வரை ஜவுளி வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. தவிர, ஜவுளி குடோன்களிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம்.
ஈரோடு ஜவுளி வாரச் சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக் கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்வது வழக்கம். இந்த வார ஜவுளிச் சந்தை நேற்று இரவு நிறைவடைந்த நிலையில், வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைவால் மொத்த விற்பனை குறைவாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், உள்ளூர் வியாபாரிகள் வருகை அதிக அளவில் இருந்ததால், சில்லறை விற்பனை அதிகரித்து காணப்பட்டதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் காட்டன் துணிகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.