அனுமதியில்லா ‘ஹோம் டே’ விடுதிகள் - கடும் பாதிப்பால் திக்கித் திணறும் புதுச்சேரி ஹோட்டல்கள்!


கோப்புப் படம்

சாலையோர உணவகங்கள், அனுமதியில்லா ‘ஹோம் ஸ்டே’வால் புதுச்சேரியில் உள்ள ஹோட்டல்கள், விடுதிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. விற்பனைக் குறைவால் நூற்றுக்கணக்கான ஹோட்டல்கள் விற்பனைக்கு தயாராகின்றன.

புத்தாண்டு, பண்டிகை காலம், தொடர் விடுமுறை காலம் தொடங்கி வார இறுதி நாட்களில் புதுவையை நோக்கி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் சுற்றுலாத் தொழில் ஜொலித்தது. புதுவை நகரப் பகுதிகளில் சாதாரண பட்ஜெட் விடுதிகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன.

சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த சில காலங்களில் அதிகரித்ததைத் தொடர்ந்து புதிது, புதிதாக நகரப் பகுதிகளில் விடுதி கட்டிடங்கள் உருவாகி வருகின்றன. இது மட்டுமில்லாமல் முழு வீடுகளை, பகுதி வீடுகளை, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடுவது அதிகரித்து வருகிறது. கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் ‘பீச் ரிசார்ட்’கள் புதிதாக உருவாகியுள்ளன. பிரபலமான ‘பிராண்ட்’ உணவகங்கள் அதிகரித்துள்ளன.

அதேபோல் சாலையோர உணவகங்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் சாலையோர உணவகங்களை அதிகளவில் நாடிச் செல்வதை பார்க்க முடிகிறது. புதுச்சேரியில் இநத சாலையோர உணவகங்கள், ஹோம் ஸ்டே’ முறையிலான விடுதி ஆகியவற்றால் பெரிய அளவில் ஹோட்டல் மற்றும் நடுத்தர தங்கும் விடுதிகளின் வர்த்தகம் குறைந்து வருவதாக அத்தொழிலில் ஈடுபடுவோர் குறிப்பிடுகின்றனர்.

இதுதொடர்பாக தென்னிந்திய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கத்துடன் இணைந்த புதுச்சேரி ஹோட்டல் சங்கத்தின் செயலர் ஆனந்த் காந்திராஜ் கூறுகையில், "ஹோட்டல் தொழிலில் நடுத்தர ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டு, மூடப்படும் சூழல் தற்போது உள்ளது. கிட்டத்தட்ட 119 ஹோட்டல் சொத்துகள் விற்பனைக்கு தயாராகியுள்ளன.

ஹோட்டல்கள் இடையேயான சீரற்ற வர்த்தகப் போட்டி, உரிமம் பெறாத ‘ஹோம் ஸ்டே, விடுதிகள், சாலையோர உணவகங்களின் பெருக்கம் ஆகியவையும் இதற்கு ஒரு காரணம். இதனால் ஹோட்டல் வணிகத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வணிக கட்டணம், உரிம கட்டணம் செலுத்தாமலும், உரிமம் பெறாமலும் பல ‘ஹோம்ஸ்டே’க்கள் செயல்படுகின்றன. இதனால் உரிமம் பெற்ற ஹோட்டல்களை விட இவைகள் குறைந்த வாடகைகளில் இயங்குகின்றன. இதை ஒழுங்குப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படாத விருந்தினர் மாளிகை குறித்த விவரங்கள் புதுச்சேரியில் எந்த அதிகாரிகளிடமும் கிடையாது” என்று தெரிவிக்கிறார்.

மேலும் இதுபற்றி புதுச்சேரி உணவக சங்க செயலாளர் மனோஜ் குமார் கூறுகையில், “பெரிய, நடுத்தர ஹோட்டல்களின் விற்பனை சரிந்துள்ளது. 2024-ம் ஆண்டை விட 40 சதவீதம் அளவுக்கு விற்பனை குறைந்துள்ளது. புதுச்சேரியின் உணவு வணிகமானது சாலையோர வியாபாரிகளை நோக்கி நகர்ந்துள்ளது.

நாங்கள் ஜிஎஸ்டி, வாடகை, உரிமக் கட்டணம், மின் கட்டணம் செலுத்துகிறோம். இதைத் தாண்டிய பராமரிப்பு செலவுகள் எங்களுக்கு உண்டு. ஊழியர்கள் ஊதியம் போன்ற செலவினங்களும் உண்டு. ஆனால், சிறிய அளவில் சாலையோர உணவகம் நடத்தும் அவர்களுக்கு அது இல்லை. இந்தப் பிரச்சினைகளால் புதுச்சேரியின் ஹோட்டல்கள் புதுவித நெருக்கடியை சந்தித்து வருகின்றன” என்று தெரிவிக்கிறார்.

ஐ.டி துறையாலும் பாதிப்பு: “இந்தப் பிரச்சினைகளுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ளப்படும் செலவின விகித சுருக்கம், ஆட்குறைப்பு ஆகியவையும் புதுச்சேரியின் சுற்றுலா வர்த்தகத்தை பாதிக்கிறது" என்றும் புதுச்சேரி ஹோட்டல் சங்கத்தின் செயலர் ஆனந்த் காந்திராஜ் தெரிவிக்கிறார்.

புதுச்சேரிக்கு சுற்றுலாவுக்கு வருவோரில் கணிசமானோர், பெங்களூருவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர்கள் ஆவர். தகவல் தொழில்நுட்பத் துறை எடுக்கப்படும் தடாலடி நடவடிக்கைகள் புதுச்சேரி சுற்றுலா வர்த்தகத்தையும் தற்காலிகமாக பாதிக்கத் தொடங்கியிருக்கிறது.

x