தமிழகத்தில் முதல்முறையாக கோவையில் மருத்துவ சாதனங்கள் சோதனைக் கூடம் ரூ.29.67 கோடியில் அமைக்க அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. சோதனைக் கூடம் அமைப்பதற்கு 1 ஏக்கர் நிலம் வழங்கிட கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சுகாதார துறையின் கீழ் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) செயல்பட்டு வருகிறது. மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் சிடிஎஸ்சிஓ அமைப்பு புதிய மருந்துகளின் அனுமதி, மருத்துவ பரிசோதனைகளை நடத்தல், மருந்துகளுக்கான தரநிலைகளை அமைத்தல், இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரக் கட்டுப்பாடு மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வந்தது.
இதைத்தொடர்ந்து, மருத்துவ சாதனங்கள் விதிகள் கடந்த 2017ல் கொண்டு வரப்பட்டு, 2018 முதல் மருத்துவ சாதனங்கள் தனியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. கோவையில் மருத்துவ சாதனங்களை ஆய்வு செய்யும் சோதனைக் கூடத்தை அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நிதி பகிர்வுடன் ரூ.29.67 கோடி நிதி ஒதுக்கி 2024 டிசம்பரில் அரசாணை வெளியிடப்பட்டது.
இது குறித்து, தமிழ்நாடு மருந்துகள் கட்டுப்பாட்டு துறை இயக்குநர் எம்.என்.ஸ்ரீதர் கூறும்போது, “கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களி ல் 24 மருத்துவ சாதன தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. அந்தவகையில், கோவையில் மருத்துவ சாதனங்கள் சோதனைக் கூடம் அமைக்க அனுமதி பெறப்பட்டது. தனியார் சார்பில் ஏற்றுமதி செய்யப்படும் மருத்துவ சாதனங்களை ஆய்வு செய்து தர அனுமதி வழங்கலாம். இதனால் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.
மேலும் பல்வேறு வகைகளில் அந்நிய செலாவணி கிடைக்க வாய்ப்புள்ளது. சோதனைக் கூடம் அமைக்க 1 ஏக்கர் நிலம் கேட்டு மாவட்ட நிர்வாகத் திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இடம் தேர்வு செய்து வழங்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. நிலம் கிடைத்தவுடன் டெண்டர் கோரப்பட்டு சோதனைக் கூடம் அமைக்கப்பட உள்ளது” என்றார்.
கோவை மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் எஸ்.மாரிமுத்து கூறும்போது, “மருத்துவ சுற்றுலாவை பொறுத்த வரை சென்னைக்கு அடுத்து கோவைக்கு அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர். மருத்துவ சாதனங்களை ஆய்வு செய்து நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதில் அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. மருத்துவ சாதனங்கள் சோதனைக் கூடம் 20 ஆயிரம் சதுர அடியில் அமைய உள்ளது. கட்டிடங்களுக்கு ரூ.8 கோடி, மருத்துவ உபகரணங்களுக்கு ரூ.9 கோடி, மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.5 கோடி நிதி என மொத்தம் ரூ.29.67 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.