மும்பை: 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், தங்களது வங்கிக் கணக்கை சுயமாக தாங்களே கையாள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இது வங்கி சேமிப்பு கணக்கு மற்றும் டேர்ம் டெபாசிட் கணக்குகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை திங்கட்கிழமை (ஏப்.21) அன்று ஆர்பிஐ அறிவித்தது. இதன்படி 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், வங்கியில் கணக்கு தொடங்கி, அதை சுயமாக கையாளலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது.
ஆர்பிஐ அறிக்கையில் தெரிவித்துள்ளது என்ன? - 10 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் வங்கி கணக்கு தொடங்கி, சுயமாக இயக்கலாம். இருப்பினும் இதில் உள்ள ரிஸ்க் மேனேஜ்மென்ட்டை கருத்தில் கொண்டு இந்த வகை கணக்குகளில் பற்று வைக்கப்படும் தொகை எவ்வளவு என்பது குறித்து வங்கிகள் நிர்ணயிக்கும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட சிறுவர்கள் பெரியவர்கள் ஆனதும் அவர்களது கணக்கை இயக்குவதற்கான புதிய விதிகள் மற்றும் கையெழுத்து உள்ளிட்டவை வங்கியின் பதிவேட்டில் அப்டேட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏடிஎம் கார்டு வசதி, செக் புக், இன்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட இன்னும் பிற சேவைகளை வங்கி கணக்கு வைத்துள்ள சிறுவர்களுக்கு வங்கிகள் தங்களது ரிஸ்க் மேனேஜ்மென்ட் கொள்கையின் அடிப்படையில் வழங்கலாம் என ஆர்பிஐ கூறியுள்ளது.
10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களும் வங்கி கணக்கை வைத்திருக்கலாம். இருந்தாலும் அதை அவர்களது சட்ட ரீதியான காப்பாளரை கொண்டு இயக்க வேண்டும்.
எதிர்வரும் ஜூலை 1-ம் தேதிக்குள் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுடன் இவற்றை இணைக்க அல்லது ஏற்கனவே உள்ள கொள்கைகளை திருத்த வேண்டும் என வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.