உலோக மாசினால் மண்ணில் நச்சுத்தன்மை: உலக அளவில் 140 கோடி மக்கள் பாதிப்பு


மண்ணுக்குள் கலந்துள்ள நச்சுத்தன்மை கொண்ட உலோக மாசு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உலக அளவில் சுமார் 140 கோடி பேர் வசித்து வருவதாக அறிவியல் ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆர்சனிக், காட்மியம், கோபால்ட், குரோமியம், தாமிரம், நிக்கல் மற்றும் ஈயம் போன்ற உலோகங்களால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானி டெய் ஹூ தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மண் மாதிரிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்ட 1493 பிராந்திய அளவிலான ஆய்வறிக்கைகள் இதில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், மேம்படுத்தப்பட்ட மெஷின் லேர்னிங் மூலம் உலக அளவில் உலோக மாசு உள்ள பகுதிகள் ‘மேப்’ (Map) செய்யப்பட்டுள்ளன.

இதில் உலக அளவில் சுமார் 14 முதல் 17 சதவித (242 மில்லியன் ஹெக்டேர்) விளைநிலங்கள், விவசாயம் மற்றும் மனித ஆரோக்கியத்தை பாதிக்க செய்யும் வகையில் ஆர்சனிக், காட்மியம், கோபால்ட், குரோமியம், தாமிரம், நிக்கல் மற்றும் ஈயம் என ஏதேனும் ஒரு உலோகத்தால் மாசு அடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பரவலாக காணப்படும் இந்த உலோக மாசு காரணமாக உணவு பாதுகாப்பு, சூழலியல் மற்றும் பொது பாதுகாப்பு போன்றவைக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. மேலும், உணவு சங்கிலியிலும் நச்சு கலந்த உலோகத்தின் பாதிப்புகளின் தாக்கம் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

இதற்கு இயற்கை அமைப்பு மற்றும் மனித முயற்சிகளும் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உலோகம் நிறைந்த பாறை மற்றும் எரிமலை செயல்பாடு மாதிரியான இயற்கையான பாதிப்புகள் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட தொழில்மயமாக்கல் மற்றும் நீர்ப்பாசன நடைமுறைகள் உள்ளிட்டவையும் இதற்கு காரணம் என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மற்றும் நில அமைப்பின் பரப்பு போன்றவையும் இந்த பாதிப்புக்கு காரணம் என தகவல்.

ஆசியாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதி, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காட்மியம் உலோக மாசுபாடு அதிகம் காணப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுநீரக பாதிப்பு மற்றும் புற்றுநோய் அச்சுறுத்தல் மாதிரியான உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மண்ணில் நச்சுத்தன்மையை காட்மியம் பரவலாக ஏற்படுத்தி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

நிக்கல், குரோமியம், ஆர்சனிக் மற்றும் கோபால்ட் போன்ற உலோகங்களும் அதன் பாதுகாப்பு அளவை கடந்து உள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இவை பல தசாப்தங்களாக மண்ணில் படிந்துள்ள காரணத்தால் உணவு மற்றும் நீரில் கலந்து நரம்பியல் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

மறுபக்கம் அதிநவீன தொழில்நுட்ப காரணமாக உலக அளவில் உலோக தேவை என்பதை அதிகரித்து வருகிறது. இந்த சூழல் பாதிப்பை மேலும் அதிகரிக்க செய்யும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நிலையான விவசாய நடைமுறைகள் தேவை என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதன் மூலம் மண் பாதுகாப்பு மற்றும் பாதிப்புகளை குறைக்க முடியும் என நம்புகின்றனர். இதற்கு சர்வதேச அளவில் முக்கியத்துவம் தர வேண்டும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஏனெனில், நச்சு உலோக மண் மாசுபாடு குறைத்து மதிப்பிடப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

x