மஞ்சள் காமாலை பாதிப்பு ஏன் ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன - அலர்ட் குறிப்புகள்!


மஞ்சள் காமாலை என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உடலியல் ரீதியில் சிவப்பு ரத்த அணுக்கள் மண்ணீரலில் அழிக்கப்படும்போது, ஹீமோகுளோபினிலிருந்து ‘பிலிருபின்’ என்றொரு மஞ்சள் நிறப்பொருள் உருவாகும். இது ரத்தத்தில் கலந்து, கல்லீரலுக்கு வந்து, பித்தநீர் மூலம் மலத்திலும் சிறுநீரிலும் வெளியேறும்.

ரத்தத்தில் பிலிருபின் 0.2 - 0.8 மி.கி. / டெ.லி. என்ற அளவில் இருந்தால் அது சரியான அளவு. கல்லீரல் பாதிக்கப்படும்போது பிலிருபின் வெளியேற முடியாமல், ரத்தத்தில் தேங்கும். அப்போது 2 மி.கி./ டெ.லி. என்ற அளவுக்கு மேல் கூடிவிடும். இதன் விளைவாகக் கண், தோல், நகம், சிறுநீர் ஆகியவை மஞ்சள் நிறத்துக்கு மாறும். பசியெடுக்காது. வாந்தி, வயிற்று வலி வரும். களைப்பாக இருக்கும். இதைத்தான் மஞ்சள் காமாலை என்கிறோம்.

காமாலை வகைகள்:

1. கல்லீரல் உள்நோய் காமாலை (Intra Hepatic Jaundice)

வைரஸ் கிருமிகள் தாக்குவது, மது குடிப்பது, மருந்துகளின் பக்க விளைவு, எலிக் காய்ச்சல், தன்தடுப்பாற்றல் நோய், பரம்பரை ரத்தக் கோளாறுகள், கல்லீரல் சுருக்கம், கொழுப்புக் கல்லீரல், கல்லீரல் புற்றுநோய் போன்ற காரணங்களால் கல்லீரல் பாதிக்கப்படும்போது, இது ஏற்படுகிறது. உதாரணத்துக்கு, ஹெபடைட்டிஸ், ஹெபடைட்டிஸ்-ஏ, ஹெபடைட்டிஸ்-பி காமாலைகள்.

2. கல்லீரல் வெளிநோய் காமாலை (Post Hepatic Jaundice):

பித்தப்பையில் வீக்கம், கல், புற்றுநோய், பித்தக் குழாய் அடைப்பு, கணைய அழற்சி, கணையப் புற்றுநோய் போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. அடைப்புக் காமாலை (Obstructive Jaundice) என்பது இதற்கு இன்னொரு பெயர்.

3. கல்லீரல் சாராத காமாலை (Pre Hepatic Jaundice):

மலேரியா, தாலசீமியா, சிக்கில் செல் ரத்தசோகை, ரத்த ஆர்.ஹெச். ஒத்திசையாமை, பரம்பரை என்சைம் கோளாறுகள் காரணமாக, இவ்வகை காமாலை ஏற்படுகிறது. ரத்த அழிவுக் காமாலை (Haemolytic Jaundice) என்றும், இதை அழைப்பதுண்டு.

4. குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே காமாலை (Physiological jaundice) காணப்படலாம். இது பிறந்த இரண்டாவது வாரத்தில் தானாகவே மறைந்துவிடும்.

மஞ்சள் காமாலை ஏற்பட காரணங்கள்:

1. பல்வேறு நோய்களால் சிவப்பணுக்கள் சிதைவடையும்போது: மஞ்சள் நிற நிறமிகள் (bilirubin hyperbilirubinemia) ரத்தத்தில் அதிகரிக்கும். எடுத்துக்காட்டு மலேரியா, மரபுவழி நோய்கள் (thalassemia), இதன் காரணமாக ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்படலாம்.

2. கல்லீரல் பாதிக்கப்படுவதால்: கல்லீரல் அழற்சி வைரஸ்களில் (ஏ, பி, சி, டி, ஈ) பல வகைகள் உள்ளன. பிற வைரஸ்களும் கல்லீரலைப் பாதிக்கலாம். நீண்ட கால மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கல்லீரலில் இழைநார் படிவு மிகும். கல்லீரல் அழற்சி (Cirrhosis), நச்சுப் பொருட்கள், சில மருந்துகள், பிறவி நோய்களாலும் கல்லீரல் பாதிக்கப்படும்போது மஞ்சள் காமாலை ஏற்படலாம்.

3. பித்த நீர் வெளியேற முடியாமல் தடைபடுவதால்: கல்லீரலில் சுரந்து, பித்தப்பையில் சேமித்து வைக்கப்படும் பித்த நீர் குடலுக்குச் செல்ல முடியாமல், பித்தக் கற்களாகவோ, கணையப் புற்றுநோய்களாலோ அடைபடும்போது, வெளியேற முடியாத பித்த நீர் ரத்தத்தில் மிகுந்தும் மஞ்சள் காமாலை ஏற்படும்.

பரிசோதனைகள் - சிகிச்சைகள்: ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கு இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. எனவே, மஞ்சள் காமாலை ஏற்பட்ட பிறகு, எந்தக் காரணத்தால், நோயினால் அது ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

வளரும் நாடுகளில் பெரும்பாலும் மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் கல்லீரல் அழற்சி வைரஸ் ‘ஏ’ வகையாகும் (HAV- Hepatitis A virus - ஹெபடைடிஸ் ‘ஏ’ வைரஸ் தொற்று). உணவு, குடிநீர் ஆகியவை சுத்தமாக இல்லாதபோது இவை பரவுகின்றன. இதேபோல் கல்லீரல் அழற்சி ‘இ’ வைரஸ் (HEV-Hepatitis E virus - ஹெபடைடிஸ் இ வைரஸ் தொற்று) சுகாதாரமற்ற உணவு, குடிநீரால் மனிதர்களுக்குப் பரவுகிறது. ‘ஏ’ வைரஸின் முதல் மூன்று வகைகளும், ‘இ’ வைரஸின் ‘முதல்’ வகையும்தான் மனிதர்களின் கல்லீரலைப் பாதித்து மஞ்சள் காமாலையை ஏற்படுத்துகின்றன.

இந்த இரண்டு வைரஸ்களுமே நமது நாட்டில் (endemic) இருந்துவருபவை. இவை பொதுவாக மஞ்சள் காமாலை, உடல் அசதி, பசியின்மை, வயிற்றுவலி போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தலாம். எந்தச் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளாமலேயே (Self - Limiting condition) இவை சரியாகிவிடவும்கூடும்.

இதற்குச் சற்று ஓய்வெடுக்க வேண்டும். திரவ உணவை உட்கொள்ள வேண்டும். மது அருந்தக் கூடாது. கொழுப்பு உணவைத் தவிர்த்து எளிதில் ஜீரணிக்கக்கூடிய எளிய உணவை உண்ண வேண்டும். மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு இந்த வைரஸின் பாதிப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படியிருந்தால், மேற்கூறிய சிகிச்சை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அதேநேரம், ஹெபடைடிஸ் ‘சி’ வைரஸ் போன்றவை ஆபத்தானவை. எனவே, எந்த வைரஸால் நமக்குப் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்ட பிறகே மருத்துவர் சிகிச்சையைத் தொடங்குவார். அப்படித் தெரிந்துகொள்ளாமல் சுயசிகிச்சை செய்வது தவறாக முடியக்கூடும்.

x