இந்திய பங்குச் சந்தையில் நேற்று கடும் வீழ்ச்சி காணப்பட்டது. சென்செக்ஸ் 2,227 புள்ளிகள் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.16 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
அமெரிக்க அதிபரின் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக சர்வதேச பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளும் நேற்று கடும் வீழ்ச்சி அடைந்தன. நேற்று காலையில் வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் 3 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண்ணான நிப்டி ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும் சரிந்தது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி சுமார் 5% சதவீதம் வரை சரிந்தன.
எனினும், மதியம் 2 மணிக்கு மேல் பங்குச் சந்தைகள் சரிவிலிருந்து சற்று மீண்டன. வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 2,227 புள்ளிகள் சரிந்து 73,138-ல் நிலை பெற்றது. நிப்டி 743 புள்ளிகள் சரிந்து 22,162-ல் நிலை பெற்றது. இந்த சரிவு சுமார் 3 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஆண்டு ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு ஆகும்.
எனினும், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவுடன் ஒப்பிடும்போது, இந்திய பங்குச் சந்தைகளின் சரிவு சற்று குறைவாகவே இருந்தன. தைவான் பங்குச் சந்தை 9.7% சரிந்ததால் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இதுபோல ஜப்பானின் நிக்கி 225 7.8%, ஹாங்காங்கின் ஹாங் செங் 13% சரிவை சந்தித்தன. மேலும் அமெரிக்காவின் டவ் பியூச்சர்ஸ், எஸ் அன்ட் பி 500 மற்றும் நாஸ்டாக் பியூச்சர்ஸ், ஜெர்மனியின் டாக்ஸ், பிரான்ஸின் சிஏசி 40, இங்கிலாந்தின் எப்டிஎஸ்இ 100 ஆகியவையும் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகின்றன.
உலக நாடுகள் தங்கள் நாடுகளின் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகக் கூறி, பதிலுக்கு அந்த நாடுகளின் பொருட்களுக்கு அதே விகதத்தில் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். இதற்கான பட்டியலை கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கான வரி விகிதத்தை மேலும் அதிகரிப்போம் என சீனா அறிவித்தது. இதன் காரணமாக அமெரிக்கா உட்பட சர்வதேச பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்த்து வருகின்றன.