திடீர் சர்ச்சை... 'சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவில்லை... சீனா விஞ்ஞானி பேட்டி!


ஓயாங் ஜியுவான்

சந்திராயன் 3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவில்லை என சீனாவின் தலைமை விஞ்ஞானி ஓயாங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரயான்-3 திட்டம்

நிலவில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு கால்பதித்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த பெருமையை இந்தியா பெற காரணமாக இருந்தது சந்திரயான்-3 விண்கலம் தான். அதாவது நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் -3 விண்கலத்தை ஜூலை மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தினர்.

இந்த விண்கலம் பூமி சுற்றுவட்டபாதையை கடந்து நிலவின் சுற்றுவட்டபாதைக்குள் நுழைந்தது. அதன்பிறகு உந்து விசை கலனில் இருந்து ஆகஸ்ட் 17-ம் தேதி விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது. அதன்பிறகு ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் வெற்றிகரமாக தரையிறங்கியது. உண்மையில் இது இந்திய விண்வெளி துறையில் புதிய மைல்கல்லாகும்.

அதே நேரத்தில் சீனாவின் தென் துருவ சாதனையை இந்தியா முறியடித்து விட்டதாக அப்போதே தகவல்கள் பரவின. இந்த நிலையில், சீனாவின் தலைமை விஞ்ஞானி ஓயாங் ஜியுவான், அந்த நாட்டின் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டி தற்போது சர்ச்சையாகியுள்ளது.

அதில் அவர், ‘’பூமியில், தென் துருவமானது 66.5 மற்றும் 90 டிகிரி தெற்கே வரையறுக்கப்படுகிறது, ஏனெனில் அதன் சுழற்சி அச்சு சூரியனுடன் ஒப்பிடும்போது சுமார் 23.5 டிகிரி சாய்ந்துள்ளது.

சந்திரனின் சாய்வு 1.5 டிகிரி மட்டுமே என்பதால், துருவப் பகுதி மிகவும் சிறியதாக இருக்கும். எனவே, சந்திரயான்-3 தரையிறங்கும் தளம் நிலவின் தென் துருவத்தில் இல்லை, நிலவின் தென் துருவத்தின் துருவப் பகுதியில் இல்லை’’ என அவர் கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x