2032-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘AI வேட்பாளர்’ வெல்ல வாய்ப்பு... எலான் மஸ்க் கிளப்பிய பரபரப்பு


அதிபர் தேர்தலில் ஏஐ வேட்பாளர்

2032-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், ’செயற்கை நுண்ணறிவு’ சார்பிலான வேட்பாளர் போட்டியிடவும், வெல்லவும் வாய்ப்பிருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலக மகா கோடீஸ்வரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனங்களின் அதிபருமான, எலான் மஸ்க் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை இன்றே ஆராய்வதில் பெரு விருப்பம் கொண்டவர். அதன் பொருட்டு அவர் வெளியிடும் கணிப்புகள், ஆருடங்கள் உள்ளிட்டவை பலிப்பதும் உண்டு. இந்த வகையில் 2032-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ’ஏஐ வேட்பாளர்’ களமிறங்கவும், வெற்றி பெறவும் வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்

நடப்பு 2024-ம் ஆண்டு இந்தியா மட்டுமன்றி உலகமெங்கும் பல்வேறு நாடுகளின் தேர்தலுக்கான ஆண்டாக சிறப்பு பெற்றுள்ளது. இந்த வகையில் அமெரிக்காவின் தேர்தலும் இந்த வருடம் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக களமிறங்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு குறித்து தன்னுடைய நிலைப்பாட்டினை எலான் மஸ்க் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனையொட்டி, 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி எலான் மஸ்கிடம் எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளிக்கும்போது 2032-ம் ஆண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வேட்பாளராக களமிறங்கவும், வெற்றி பெறவும் வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் அங்கமாக, இவ்வாறு எலான் மஸ்க் அறிவித்தார்.

ஏஐ

இதற்கு முன்னதாகவும் தேர்தல்களில் ஏஐ நுட்பங்களின் தலையீடு குறித்து எச்சரித்து இருந்தார். ”ஏஐ நுட்பங்கள் மேலும் ஸ்மார்ட்டாக இருப்பின், அவற்றால் ஜனநாயகத்துக்கு ஆபத்து நேரிடவும் கூடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். ”ஏஐ என்பதன் அடுத்தக்கட்டமான ஏஜிஐ(ஆர்டிஃபிஷியல் ஜெனரல் இண்டலிஜென்ஸ்) அடுத்து வரும் 2 ஆண்டுகளில் மனிதர்களை விட நுட்பமாகவும், ஸ்மார்ட்டாகவும் செயல்படத் தொடங்கிவிடும்” என்றும் அவர் கணித்திருந்தார்.

அதற்கான பாதையில் தற்போது அவரது நிறுவனங்கள், சாட்ஜிபிடிக்கு போட்டியான ’எக்ஸ்ஏஎஐ க்ராக் 2’ என்பதை பரிசோதித்து வருகின்றன. ’ஆனால் சிப் தட்டுப்பாடு காரணமாக அவை முழு வடிவில் உருவெடுப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும்’ தற்போதை பேட்டியில் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.

பல்வேறு நாடுகளிலும் தேர்தல் முன்னேற்பாடுகள் சூடுபிடித்து வரும் சூழலில், அவற்றில் ஏஐ நுட்பம் வாயிலாக வேண்டாத சக்திகள் குழப்பம் உருவாக்கவும் கூடும் என முன்னதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இந்த ஏஐ தலையீட்டுக்கு அப்பால், ’தேர்தலில் நேரடி வேட்பாளராகவும் களமிறங்கும் என்றும், போட்டியிட்டு வெல்லவும் வாய்ப்புண்டு’ எனவும் எலான் மஸ்க் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இன்றும், நாளையும்.... சென்னை வானிலை மையம் தந்த சர்ப்ரைஸ்!

பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வந்த ஹெலிகாப்டரை சுற்றி வளைத்த தேர்தல் பறக்கும் படை!

x