இந்தி திணிப்பு... கோவா விமான நிலையத்தில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த அவமதிப்பு... குமுறும் தமிழகத் தலைவர்கள்!


உதயநிதி ஸ்டாலின்

கோவா விமான நிலையத்தில் ’தேசிய மொழியான இந்தி தெரியாதா..’ என்று தமிழ் பெண் ஒருவரை பாதுகாப்பு படைவீரர் ஒருவர் மிரட்டியதற்கு எதிராக, தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கோவா விமான நிலையத்தில் சர்மிளா ராஜசேகர் என்ற தமிழ்ப் பெண்ணுக்கு கசப்பான அனுபவம் நேரிட்டிருக்கிறது. அது தொடர்பாக, நடந்த சம்பவத்தை விவரித்ததுடன் கண்டனமும் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார் அமைச்சர் உதயநிதி.

அந்த பதிவில், ‘கோவா விமான நிலையத்தில் வீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், “இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா” என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி - மிரட்டிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். விமான நிலையங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது.

பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர - இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல. பல மொழிகள் பேசப்படும் இந்திய ஒன்றியத்தில் பிறமொழிப் பேசும் மக்கள் மீது இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இத்தகைய போக்கினை ஒன்றிய அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும்’ என அமைச்சர் உதயநிதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதே விவகாரத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் வன்மையாக கண்டித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார்.

"தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது?

பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

இதே விவகாரத்தை கையிலெடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே இந்தி தெரியவில்லை என்பதற்காக தான் மிரட்டப்பட்டது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் சர்மிளா ராஜசேகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல; தேசத்தின் அலுவல் மொழிகளில் அதுவும் ஒன்று என்பதை புரிந்துகொள்ளாத வட இந்தியர்களால் தமிழகர்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு எதிராக #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி உலகமெங்கும் தமிழகர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

x