சந்திரயான் 3 லேண்டரை நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை இன்று மாலை 5.44 மணிக்குத் தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்தது. ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த மாதம் 14-ம் தேதி விண்ணில் ஏவியது . சந்திராயன் 3 விண்கலம் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என்றும், பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டரில் உள்ள நிலவை அடைய 40 நாட்களாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிலவில் தரையிரங்கிய பின்னர் நிலவின் தென் பகுதியில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் சந்திரயான் 3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று நிலவில் சந்திரயான் கால் பதிக்கிறது. நிலவின் தென் துருவத்தில் இன்று மாலை 6:04 மணிக்கு சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் லேண்டரில் இருந்து ரோவர் கருவி வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தெரிவித்தது.
இந்நிலையில் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கை மாலை 5.44 மணிக்குத் தொடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. அத்துடன் குறிப்பிட்ட இடத்துக்கு லேண்டர் வந்தவுடன், தரையிறங்குவதற்கான கட்டளையை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்க உள்ளனர்.
தானியங்கி இறக்கு முறைப்படி, லேண்டர் வாகனம் படிப்படியாக நிலவை நோக்கி இறங்கத் தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்குவதை நேரலையில் பார்க்க ISRO Website – https://isro.gov.in , https://isro.gov.in , Facebook https://facebook.com/ISRO, YouTube https://youtube.com/live/DLA_64yz8Ss ஆகிய இணையதளங்களை காணலாம்.