இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களைவிட ஆண்களே அதிகம் செலவழிப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
நாடு வேறுபாடின்றி பெண்களுக்கு மிகவும் பிடித்தமானதாக ஷாப்பிங் செல்வது விளங்குகிறது. அதிலும் ஷாப்பிங் என்றாலே பெண்கள்தான் அதிகம் செலவழிப்பார்கள் என்ற பொதுக்கருத்தும் வெகு பிரபலம். ஆனால் ஆன்லைன் ஷாப்பிங்கை பொறுத்தளவில் பெண்களைவிட ஆண்களே அதிகம் செலவழிக்கிறார்கள் என்கிறது அண்மை ஆய்வு முடிவு ஒன்று.
கொரோனா காலத்து எதிரொலியாக ஷாப்பிங் என்பதன் ஆன்லைன் வடிவம் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்குவதையே, நம்பகத்தன்மை உடையதாக கருதியிருந்த இந்திய சமூகம், கொரோனா மாற்றங்களில் ஒன்றாக ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆழ்ந்து போனது. கொரோனா காலத்து கட்டுப்பாடுகளும், ஆன்லைன் ஷாப்பிங்கின் அருமையை இந்தியர்களுக்கு உணரச் செய்திருக்கிறன.
அப்படி இந்தியாவில் பெருகியிருக்கும் ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை விட ஆண்களே அதிகம் செலவழிப்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இதற்கு இந்தியாவில் ஆண்களைவிட பெண்கள் பொருளாதார சுதந்திரத்தில் பின் தங்கியிருப்பதும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
இது உட்பட வேறு பல சுவாரசியங்களும் ஆன்லைன் ஷாப்பிங் குறித்தான ‘டிஜிட்டல் ரீடெய்ல்: தி இண்டியன் பெர்ஸ்பெக்டிவ்' என்ற ஆய்வில் வெளிப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற ஐஐஎம்-அகமதாபாத் கல்வி நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இத்தகைய நடப்பு உண்மைகள் தெரிய வந்துள்ளன. இந்தியர்களின் ஆன்லைன் ஷாப்பிங் குறித்தான இந்த ஆய்வு ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் 25 மாநிலங்களின் 35 ஆயிரம் பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
ஆய்வின் பிரதான தகவலின் படி, ஆண்களின் ஆன்லைன் செலவினம் ரூ.2,484 என்பதாகவும், அதுவே பெண்களைப் பொறுத்தளவில் ரூ1,830 என்பதாகவும் இருக்கிறது. அதாவது, ஆன்லைனில் பெண்களைவிட ஆண்கள் 36% அதிகம் செலவழிக்கிறார்கள். ஃபேஷன் ஆடைகளை ஆன்லைனில் வாங்குவதில் மட்டும், ஆண்களை விஞ்சியவர்களாக பெண்கள் முன்னிலை பெறுகிறார்கள். அதுவே, எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்குவதில் பெண்களை ஆண்கள் முந்துகிறார்கள்.
பெரு நகரங்களைவிட இந்தியாவின் இரண்டாம் அடுக்கு நகரங்கள் ஃபேஷனுக்கு 63% அதிகமாகவும், எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு 21% அதிகமாகவும் செலவழிக்கின்றன. இது மட்டுமன்றி ஆண் - பெண் என அனைவருமே, பேஷன் ஆடை பொருட்களை வாங்கும்போது மட்டும் கேஷ் ஆன் டெலிவரி கட்டண முறைக்கே முன்னுரிமை தருகிறார்கள்.
இதையும் வாசிக்கலாமே...
இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் திட்டம்: நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்க இஸ்ரோ அழைப்பு!