தடுமாறும் பிஎஸ்என்எல்; தாமதமாகும் 4ஜி... தற்காலிகமாக வோடோபோன் சேவைக்கு பரிசீலனை


வோடோபோன் ஐடியா- பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி வெளியீட்டை தாமதப்படுத்தி வருவதால், வாடிக்கையாளர்களின் அதிருப்தியை தவிர்க்க வோடோபோன் சேவையை தற்காலிகமாக பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜியோ, ஏர்டெல் போன்றவை 5ஜி சேவையில் வாடிக்கையாளர்களை ஈர்த்துவர, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னமும் 4ஜி சேவையை எட்டவே தள்ளாடி வருகிறது. இந்தியாவில் ஜியோ வாயிலாக 4ஜி சேவை அறிமுகமாகி ஆறு ஆண்டுகளை கடந்துவிட்டது. இதர போட்டி நிறுவனங்களும் அதே பாதையில் 4ஜி, 5ஜி என அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தாவி விட்டன.

ஆனபோதும் அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தங்களுக்கான 4ஜி சேவையை காணாது தவித்து வருகிறார்கள். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களில் பெரும்பகுதியினர் இதர சேவை நிறுவனங்களுக்கு ஏற்கனவே தாவி விட்டனர். மிச்சமிருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள பிஎஸ்என்எல் தடுமாறி வருகிறது. அண்மை தகவலின்படி பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவை டிசம்பருக்கு தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.

ட்ராய் அமைப்பின் தரவுகளின்படி, ஆகஸ்ட் 2023-ல் 22,20,654 வாடிக்கையாளர்களும், செப்டம்பர் 2023-ல் கூடுதலாக 23,26,751 வாடிக்கையாளர்களும் பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து வெளியேறி இருக்கின்றனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த பிஎஸ்என்எல் தொழிலாளர் சங்கங்கள், மத்திய அரசிடம் புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளன. அதன்படி வெளியேறும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களைத் தடுக்க, வோடோபோன் நிறுவனத்தின் 4ஜி சேவையை தற்போதைக்கு பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்துள்ளனர்.

5ஜி சேவை

பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவைகள் தாமதமாவதற்கு, 4ஜி டவர் தளங்களை நிறுவுவது மற்றும் 4ஜி-க்கான உபகரணங்களை வாங்குவது ஆகியவற்றில் ஏற்படும் தாமதமே காரணம் எனவும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் அது குறித்தும் கேள்வி எழுப்பின. முன்னதாக, தொலைத்தொடர்பு துறையில் தனியாருக்கு சாதகமாக அரசு எடுத்த முடிவுகளே பிஎஸ்என்எல் நிறுவனம் நொடித்ததற்கு காரணம் என தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x