சாதனை... 47 கோடியை கடந்தது ஜியோவின் மொத்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை!


ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 47 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது. 1 கோடியே 12 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஜியோ சேவையில் இணைந்துள்ளனர்.

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், 2023 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த, இந்த நிதியாண்டின் 3வது காலாண்டில் மட்டும் 1 கோடியே 12 லட்சத்திற்கும் அதிகமான ( 11.2 million) சந்தாதாரர்கள் ஜியோவின் கீழ் வந்துள்ளனர். இது, கடந்த 10 காலாண்டுகளில் இல்லாத அளவு அதிகமாகும். அதேபோன்று, இந்த காலாண்டில் 38.1 பில்லியன் ஜிபி டேட்டா பயன்படுத்தப்பட்டதாகவும், 1.37 ட்ரில்லியன் நிமிடங்கள் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ 5ஜி

மேலும், இந்த 3வது காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் முழுமையான நிகர லாபம் ரூ.5,208 கோடி ஆகும். இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 12.3 சதவிகிதம் அதிகமாகும்.

மேலும், கடந்த 3 மாதத்தில் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் செலுத்துதலுக்கு முந்தைய வருமானம் (EBITDA) மட்டும் 12 % அதிகரித்துள்ளதாகவும், செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் (Revenue from operations) 10.3 % அதிகரித்து 25,368 ஆக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

ஜியோ

டிசம்பர் காலாண்டிற்கான மொத்த செலவுகள் ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.16,839 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.18,518 கோடியாக அதிகரித்துள்ளது என ஜியோ தெரிவித்துள்ளது.

2023 ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் லாபம் 12 சதவீதம் அதிகரித்து 15,129 கோடி ரூபாயாக உள்ளது, இதேபோல் வருமானமும் 10 சதவீதம் அதிகரித்து 74,160 கோடி ரூபாயாக உள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2,734.90 ரூபாய் அளவில் முடிந்துள்ளது.

x