ஆயி பூரணம் அம்மாளுக்கு அரசு சார்பில் விருது... அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!


ஆயி பூரணம் அம்மாள்

மதுரை அரசு பள்ளிக்கு 4 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய மதுரை ஆயி பூரணம் அம்மாளுக்கு அரசு சார்பில் குடியரசு தின விழாவில் விருது வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை எம்பி வெங்கடேசன் பாராட்டு

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை கிடைத்ததையடுத்து மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

ஆயி பூரணத்தின் மகள் ஜனனி(30) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக ஆயி அம்மாள் வழங்கினார். கடந்த 5-ம் தேதி பள்ளியின் பெயரில் நிலத்தை பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார். அரசு பள்ளிக்கு தங்கள் இடத்தை தானமாக வழங்கிய அவருக்கு மதுரை எம்பி வெங்கடேசன் உட்பட ஏராளமானவர்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவருக்கு அரசு சார்பில் சிறப்பு விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், "கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் .

ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாக மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்" என பதிவிட்டுள்ளார்.

x