இந்திய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதால் துருக்கியின் செலிபி நிறுவன பங்குகள் சரிவு


இந்திய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதால் துருக்கியின் செலிபி நிறுவன பங்குகள் 20 சதவீதம் வரை சரிந்திருக்கிறது.

துருக்கியை சேர்ந்த செலிபி ஏவியேஷன் நிறுவனம் இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் சேவை, சரக்கு சேவை உள்ளிட்ட பணிகளை கையாண்டு வந்தது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே அண்மையில் நடைபெற்ற போரின்போது பாகிஸ்தானுக்கு துருக்கி நேரடியாக ஆதரவு அளித்தது. துருக்கியின் அதிநவீன ட்ரோன்கள் மூலம் இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செலிபி ஏவியேஷன் உடனான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகிறது என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை நேற்று முன்தினம் அறிவித்தது. இதன்காரணமாக துருக்கி பங்கு சந்தையில் செலிபி நிறுவனத்தின் பங்குகள் நேற்று 20 சதவீதம் வரை சரிந்தன.

துருக்கி நாட்டின் பொருளாதாரத்தில் 12 சதவீத வருவாய், சுற்றுலா துறை மூலம் ஈட்டப்படுகிறது. அந்த நாட்டுக்கு ஆண்டுதோறும் சுமார் 6.22 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சுற்றுலா செல்கின்றனர். இதில் 25 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர்.

போரின்போது பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளித்ததால் அந்த நாட்டை இந்தியர்கள் முழுமையாக புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். துருக்கி செல்வதற்கான முன்பதிவுகளை இந்தியர்கள் ரத்து செய்து வருவதால் அந்த நாட்டுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது

x