“இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார்” - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்


கராச்சி: இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள கம்ரா விமானப்படை தளத்தை நேரில் பார்வையிட்ட அவர் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார். மேலும் அமைதிக்கான நிபந்தனைகளில் காஷ்மீர் பிரச்சினையும் அடங்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது அவருடன் பாக். துணைப் பிரதமர் இஷாக் தார், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் மற்றும் விமானப்படைத் தளபதி ஜாகீர் அகமது பாபர் சித்து ஆகியோர் இருந்தனர்.

முன்னதாக நேற்று (ஏப்.15) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. இது இருதரப்பு விவகாரம். இதில் 3-ம் தரப்புக்கு இடமில்லை.

தீவிரவாதம் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே தெளிவுபடுத்தி உள்ளார். இந்தியாவுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர். அவர்களின் பட்டியலை பாகிஸ்தானிடம் வழங்கி உள்ளோம். அந்த தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை மூட வேண்டும். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும். இதுகுறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.

x