விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் நட்சத்திர வடிவல் செய்யப்பட்ட அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே விஜயகரிசல் குளம் மேட்டுகாடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், சங்கினால் செய்யப்பட்ட பதக்கம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 4,750-க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் தோண்டிய அகழாய்வு குழியில் 1.90 மீட்டர் ஆழத்தில், சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர வடிவிலான அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 1.8 மி.மீ சுற்றளவும், 0.6 மி.மீ கணமும், 3.4 கிராம் எடையும் கொண்ட இந்த அணிகலன் அதன் இணையோடு கிடைத் திருப்பது கூடுதல் சிறப்பு ஆகும். பழந்தமிழர்களின் கலை நயத்திற்கு மேலும் ஒரு சான்றாக சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கிடைத்துள்ளன என தொல்லியல் அகழ்வாய்வு இயக்குநர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.
மேலும், வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில், வியக்க வைக்கும் வெம்பக்கோட்டை" ஆச்சர்யங்கள் நிறைந்த பல தொல் பொருள்களை தன்னுள் வைத்திருக்கும் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வுத் தளத்தில் ஆழத்தில், சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த அணிகலன் அதன் இணையோடு கிடைத்திருப்பது கூடுதல் சிறப்பு. இன்னும் பழந்தமிழர் பொக்கிஷங்கள் பலவற்றை தொல்லியல் துறை வெளிச்சத்துக்கு கொண்டு வரும்” என பதிவிட்டுள்ளார்.