திருப்பூரில் காட்சிப் பொருளாக மாறிய காவல் சோதனைச் சாவடிகள்!


படங்கள்: இரா.கார்த்திகேயன்

திருப்பூர் மாநகரில் காவல் சோதனைச்சாவடிகள் வெறும் காட்சிப் பொருளாகவே இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வெளி மாநிலத்தவர்கள் மற்றும் தமிழகத்தின் வெளி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அதிகம் வாழும் நகரம் திருப்பூர். இங்கு பின்னலாடை தொழில் நாடி பலரும் நாள்தோறும் திருப்பூருக்கு வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் திருப்பூரின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநகரின் தொடர் குற்றங்களை தடுக்கவும், பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் காவல் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக திருப்பூர் மாநகர மக்கள் கூறும்போது, “திருப்பூர் மாநகரில் குற்றங்களை தடுக்கவும், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் மாநகரின் பல்வேறு இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஆனால் அவை வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே இருப்பதால், யாருக்கும் எவ்வித பயனும் இல்லை. திருப்பூர் மாநகரில் வடக்கு காவல் எல்லைக்கு உட்பட்ட 36-வது வார்டு சூசையாபுரத்தில் காவல் சோதனைச்சாவடி கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.

ஆனால் அந்த சோதனைச் சாவடி இன்றைக்கு வரை பயன்பாட்டுக்கு வராமல், தூசி படிந்து காணப் படுகிறது. அதேபோன்று சோதனைச் சாவடி பல மாதங்களாக 24 மணி நேரமும் மூடிக் கிடப்பதால், பொதுமக்களுக்கும் எவ்வித பயன் இல்லை. இதேபோல் மாநகரின் பல்வேறு சோதனைச் சாவடிகள் காட்சிப் பொருளாக இருப்பதால் குற்றங்களை கட்டுப் படுத்த வாய்ப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

பல்வேறு பகுதிகளிலும் சூசையாபுரம் போல் காவல் சோதனைச்சாவடிகள் மூடிக் கிடக்கின்றன. திருப்பூர் மாநகரில் பொதுமக்களின் தேவைக்கு காவல் நிலையங்கள் இருந்தாலும், ஒவ்வொரு காவல் நிலையத்தின் கீழ் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள காவல் சோதனைச் சாவடிகளில், போதிய போலீஸாரை சுழற்சி அடிப்படையில் நியமித்து குற்ற நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது அவசியமான ஒன்றாகும்” என்றனர்.

x