இந்தியாவும் பாகிஸ்தானும் பழிக்குப் பழியான தாக்குதல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவுபெற்ற தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இருநாடுகளிடையே மோதல் முற்றியுள்ளது. இந்த நிலையில், சீனாவுக்கான அமெரிக்க தூதராக டேவிட் பெர்டியூ பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஓவல் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ட்ரம்ப் கூறியதாவது:
பழிக்குப்பழியான செயல்களை செய்வது அவமானம். ஓவல் அலுவலகம் வரும்போதுதான் அதைப் பற்றி கேள்விப்பட்டோம். கடந்த கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டால் ஏதோ நடக்கப் போகிறது என்பதை மக்கள் முன்கூட்டியே அறிந்திருப்பர். இந்த தாக்குதல் மோசமானது. இரு நாட்டின் தலைவர்களையும் எனக்கு நன்றாக தெரியும்.
இருவருடனும் நல்ல உறவு உள்ளது. இந்த மோதல் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். இரு நாடுகளுக்கிடையே சண்டையை தடுக்க ஏதேனும் செய்ய முடியும் என்றால் அதனை செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு ட்ரம்ப் கூறினார். இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலுக்கு பிறகான நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று அமெரிக்க ராணுவ பசிபிக் காமாண்டிங் ஜெனரல் ரொனால்ட் கிளார்க் தெரிவித்துள்ளார்.