திருவண்ணாமலையில் ரூ.50 கோடியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான திருவண்ணாமலையில் இயங்கி வரும் மத்திய பேருந்து நிலையமானது இடநெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மேலும், பேருந்து நிலையம் முன்பு உள்ள போளூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. இதனால், ‘விசாலமான’ புதிய இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என மாநகர மக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்தனர். புதிய பேருந்து நிலையம் அமைக்க, கடந்த அதிமுக ஆட்சியில் பார்வையிடப்பட்ட பல இடங்களும், முடிவு எட்டாமல் கைவிடப்பட்டது.
இந்நிலையில் 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், திருவண்ணாமலை ரயில் நிலையம் அருகே மூடப்பட்ட டான்காப் ஆலை இயங்கிய இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது என திமுக ஆட்சியில் முடிவானது. ரூ.30.15 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இருப்பினும், மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் பேருந்துகளின் எண்ணிக்கைக்கு கூடுதலாக, புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்தும் அளவுக்கு இட வசதி இல்லை என்ற குற்றம்சாட்டு எழுந்தது. இட நெருக்கடி தொடரும் என பொதுமக்களும், பக்தர்களும் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக 'இந்து தமிழ் திசை' நாளிதழில் கடந்தாண்டு செப்.14ம் தேதி கட்டுரை வெளியானது.
இதன் எதிரொலியாக பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு கடந்தாண்டு செப்.20ம் தேதி ஆய்வு செய்தபோது, “புதிய பேருந்து நிலையத்தை யொட்டி, அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் இடத்தையும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 100 பேருந்துகளை நிறுத்தலாம். முதற்கட்ட பணி டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு பெற்றுவிடும். ஜனவரி மாதம் முதல் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும். புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாநகர பகுதிக்குள் வர வேண்டும் என்றால் ரயில்வே மேம்பாலத்தை கடக்க வேண்டும். இதனால், தண்டவாளத்தை கடக்க நகரும் நடைமேடை அமைக்கப்படும்” என்றார்.
அமைச்சரின் ஆய்வுக்கு பிறகு பணிகள் வேகமெடுக்கும் என பக்தர்களும், மாநகர மக்களும் எதிர்பார்த்த நிலையில், அதன்பிறகு புதிய பேருந்து நிலைய பணியில் தொய்வு ஏற்பட்டது. புதிய பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் முன்பு உள்ள கட்டிடங்களை கையகப்படுத்துவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்டிடங்கள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால், திட்டமிட்டப்படி, புதிய பேருந்து நிலையத்தை ஜனவரி மாதம் திறக்க முடியவில்லை. புதிய பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகளும், வண்ணம் பூசும் பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளன. ஆனால், இதர உட்கட்டமைப்பு பணிகளும், சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
இதுகுறித்து பொதுமக்களும், பக்தர்களும் கூறும்போது, “ஆன்மிக பூமியான திருவண்ணாமலைக்கு தினசரி பல ஆயிரம் பக்தர்கள் வருவதால், போக்குவரத்தை சீரமைப்பது தலையாய கடமையாகும். இதற்கு மாநகரின் மைய பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தை, வேறு இடத்துக்கு மாற்றினால்தான் தீர்வு கிடைக்கும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. சட்டப்பேரவையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்ட பிறகும், இடத்தை தேர்வு செய்வதில் ஏற்பட்ட இடர்பாடுகளால், புதிய பேருந்து நிலையம் அமையவில்லை.
பின்னர், திமுக ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் எ.வ.வேலுவின் முயற்சியால், மூடப்பட்ட டான்காப் ஆலை இயங்கி வந்த இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்தனர். இடநெருக்கடி ஏற்படும் என சுட்டிக்காட்டி பிறகு, கூடுதல் இடம் ஒதுக்கப்பட்டது. பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில், புதிய பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் முன்பாக உள்ள கட்டிடங்கள் அகற்றப்படாமல் உள்ளன.
இக்கட்டிடங்களை கையகப்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், பணிகள் முழுமை பெறாமல், திட்டமிட்டபடி, புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை. இது தொடர்பாக உள்ள சட்ட சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்தி, புதிய பேருந்து நிலையத்தை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்” என்றனர்.