திருப்பத்தூர் அருகே பல கி.மீ. தொலைவு நடந்து சென்று ஓடை நீரை எடுத்து வரும் நிலைக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதேநிலை நீடிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அடுத்த குறும்பேரி ஊராட்சியில் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் சுபேதார் வட்டம் என்ற குக்கிராமம் உள்ளது. இந்த பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி வாழ்மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக கால்நடை வளர்ப்பு, விவசாய கூலி தொழில், தோட்ட வேலை, 100 நாள் வேலை உள்ளிட்ட தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இப்பகுதியில், பொதுமக்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் சுத்தமாக இல்லை. குறிப்பாக, அத்தியாவசிய தண்ணீர் தேவைக்காக பல கி.மீ., தொலைவில் ஓடைக்கு சென்று அங்கிருந்து தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ”சுபேதார் வட்டத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் குழாய் வசதி செய்து தரப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீருக்காக மனு அளித்து வருகிறோம். எங்கள் கிராமத்தை யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை.
குடிக்க மட்டுமின்றி பிற தேவைகளுக்கும் தண்ணீர் வேண்டுமென்றாலும் நாங்கள் இங்கிருந்து ஜவ்வாது மலையில் இருந்து வரும் ஓடை தண்ணீரை தான் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஜவ்வாது மலையில் இருந்து வரும் ஓடை நீரில் குழிகள் தோண்டி அதில் வரும் நீரை தெளிய வைத்து அந்த தண்ணீரை காலி குடங்களில் பல கி.மீ., தொலைவுக்கு சுமந்து வந்து அதை தான் குடிநீராகவும், சமையல் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகிறோம்.
ஓடைக்கு செல்லும் பாதையானது கரடு முரடாக இருப்பதால் மிதி வண்டிகளிலோ, இருசக்கர வாகனங்களிலோ செல்ல முடியாத நிலை உள்ளது. ஒரு குடம் தண்ணீர் எடுக்க வேண்டுமென்றாலும் நாங்கள் ஒரு மணி நேரம் செலவிட வேண்டும். ஓடை தண்ணீரும் சுத்தமாக கிடைப்பதில்லை. எங்கள் கிராமத்தையொட்டியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களது அழுக்கு துணிகளை இந்த ஓடையில் கொண்டு வந்து துவைக் கின்றனர். இதனால், சோப்பு மற்றும் ரசாயனம் கலந்த தண்ணீரை நாங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதனால், சுபேதார் வட்டம் கிராமமக்கள் அடிக்கடி பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகி வருகின்றனர். ஓடையில் இருந்து எடுத்து வரும் தண்ணீரை காய்ச்சி பயன்படுத்தினாலும் சிலர் நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். தண்ணீர் இல்லாமல் நாங்கள் மட்டும் அல்ல எங்கள் கால்நடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போதிய தண்ணீர் கால்நடைகளுக்கு கிடைக்காததால் பால் உற்பத்தியின் அளவும் குறைந்து காணப்படுகிறது.
இதனால், பால் வியாபாரத்தை நம்பி குடும்பம் நடத்தி வருவோர், ஆடு மற்றும் நாட்டுக் கோழி வளர்ப்போர்களும் உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் வரும்போதெல்லாம் வாக்கு கேட்டு வரும் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் என பலர் சுபேதார் வட்டத்தில் விரைவில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி தினசரி 2 மணி நேரம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படும் என உறுதி கூறுகின்றனர்.
அவர்களின் வாக்குறுதி வெறும் ஏட்டளவிலேயே உள்ளது. நாங்களும் மக்கள் குறைதீர்வு கூட்டம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், குடிநீர் வடிகால் வாரியம் என பலரிடம் மனு அளித்தும், எங்கள் கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பிலேயே உள்ளது.
ஆகவே, எங்கள் கிராம மக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதிக்கு உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து சீரான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்றனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ”சுபேதார் வட்டத்தில் குறைவான குடியிருப்புகள் தான் உள்ளன. இருப்பினும், அங்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் தண்ணீர் வசதி பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.