தேதி, மாதம், ஆண்டை கூறினால் கிழமையை சரியாக சொல்லி அசத்தும் மதுரை மாணவர்!


படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: தேதி, மாதம், ஆண்டை கூறினார், அது எந்த கிழமை என்பதை நொடிப் பொழுதில் கூறி அசத்துகிறார் மதுரையை சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவர்.

மதுரை அவனியாபுரம் அருகிலுள்ள சுப்பிரமணியன் நகரில் வசிப்பவர் ஜெயராஜா. இவரது மனைவி பிரியங்கா. ஜெயராஜா கார் ஓட்டுநராகவும், பிரியங்கா தனியார் பள்ளியில் கணினி ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இத் தம்பதியின் 9 வயது மகன் ஜே.பி.அகிலேஷ். 4-ம் வகுப்பு படிக்கும் இவர், தனது ஞாபக சக்தியை வளர்த்துக்கொண்டதன் மூலம் தனித் திறமைகளை பெற்றுள்ளார். ஆண்டு, மாதம், தேதியை கூறினால், அன்றைய கிழமையை சரியாக கூறிவிடுகிறார். அதோடு, வாகன பதிவெண்ணை கூறினால், அது எந்த மாவட்டத்தைச் சேர்ந்தது என்பதை உடனடியாக கூறி அசத்தி வருகிறார். ஒவ்வொரு கேள்விக்கும் தயக்கமின்றி நொடியில் பதிலளித்து அசத்தும் மாணவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து அகிலேஷின் தாயார் பிரியங்கா கூறியதாவது: கதைகள் வாசிப்பு, கிரிக்கெட் பார்ப்பதில் அகிலேஷுக்கு ஆர்வம் அதிகம். எதையும் கூர்ந்து கவனித்து கற்றுக்கொள்வதில் அவனுக்கு தனித்திறமை உள்ளது. 500 ஆண்டுகளுக்கு முந்தைய, பிந்தைய தேதி, மாதத்தை கூறினாலும், கிழமையை சரியாக கூறிவிடுகிறான். ஒவ்வொரு மாதமும் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற கிழமைகள் எத்தனை வரும் என்பது குறித்து கேட்டால், உடனடியாக பதில் கூறிவிடுகிறான்.

ஒருமுறை வெளியே அழைத்துச் சென்ற போது, வாகன பதிவெண் குறித்து எங்களிடம் கேட்டான். மதுரையில் பதிவு பெற்ற வாகனங்களின் எண்கள் டி.என். 58, 59, 64 என தொடங்கும் என்று கூறினோம். இதையடுத்து, அதில் ஆர்வம் ஏற்பட்டு அனைத்து மாவட்டங்களின் பதிவெண்களை யும் கற்றுக் கொண்டான். தமிழகத்திலுள்ள டிஎன் 01 முதல் டிஎன் 99 வரையிலும் முதல் 2 எண்களை குறிப்பிட்டால் தொடர்புடைய மாவட்டம், அதற்கான வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களையும் சரியாக சொல்கிறான். மாவட்டம் மட்டும் சொன்னாலும் வாகன பதிவெண்களை சொல்கிறான்.

தொடர்ந்து மாநிலங்கள், நாடுகளின் பெயர், கொடிகள் பற்றிய தகவல்களை அகிலேஷுக்கு கற்றுத் தருகிறோம். அவரது தனித் திறமைகளை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்று கூறினார்.

x