சேலத்தில் இருந்து ஏற்காடு சுற்றிப்பார்க்க ரூ.300தான்... பேக்கேஜ் பேருந்து இயக்கம்!


சேலம்: கோடை விடுமுறை காரணமாக, ஏற்காடு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ரூ.300 கட்டணத்தில் பேக்கேஜ் பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில், மக்கள் விடுமுறையைக் கழித்திட சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதில் ஆர்வமுடன் உள்ளனர். குறிப்பாக, கோடை வெப்பத்தில் இருந்து விலகியிருக்கும் வகையில், குளுகுளு சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் ஆர்வமுடன் செல்கின்றனர். அதன்படி, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை, சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்திடும் வகையில் ரூ.300 கட்டணத்தில் உள்வட்ட சிறப்பு பேருந்து ( பேக்கேஜ் பேருந்து) சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படுகிறது.

இந்த பேக்கேஜ் சிறப்பு பேருந்தானது, நேற்று (4-ம் தேதி) முதல் கோடை காலம் முடியும் வரை தினமும் காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோயில், மஞ்சக்குட்டை காட்சி முனை, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம் ஆகிய இடங்களை கண்டு களித்து மீண்டும் சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு மாலை 7 மணிக்கு வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பயணி ஒருவருக்கு ரூ.300, சிறுவர்களுக்கு ரூ.150 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இப்பேருந்தில் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளின் வசதிக்காக, அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழக முன்பதிவு மையம் வழியாகவும், tnstc.in என்ற இணையதளம், tnstc bus ticket booking app செயலி வழியாகவும் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, மே தின விடுமுறையால், பலருக்கும் தொடர் விடுமுறை கிடைத்தது. எனவே, கடந்த சில நாட்களாக, ஏற்காட்டுக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். அதுபோல, நேற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை ஏற்காட்டில் அதிகமாக இருந்தது. அங்குள்ள சுற்றுலா இடங்களில், கூட்டம் கூட்டமாக சுற்றுலாப் பயணிகளை காண முடிந்தது. குறிப்பாக, அண்ணா பூங்கா, தாவரவியல் தோட்டம், ரோஜா தோட்டம், காட்சி முனைப்பகுதிகள், ஏற்காடு ஏரி படகுத்துறை உள்ளிட்ட இடங்கள் சுற்றுலாப் பயணிகள் வருகையால் களை கட்டியிருந்தது.

x