இந்தியா தாக்குதல் நடத்தினால் அணு ஆயுதம் உட்பட முழு பலத்தை பயன்படுத்துவோம்: ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் பேச்சு


புதுடெல்லி: இந்தியா தாக்குதல் நடத்தினால் அணு ஆயுதம் உட்பட முழு பலத்தையும் பயன்படுத்துவோம் என ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி ரஷ்ய செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது போர் தொடுப்பதற்கு சமமானது. மேலும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த திட்டிமிட்டிருப்பதாக நம்பத்தகுந்த உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நடக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

எனவே, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினாலோ அல்லது தண்ணீர் விநியோகத்தை தடை செய்தாலோ அணு ஆயுதங்கள் உட்பட ராணுவத்தின் முழு பலத்தையும் பயன்படுத்தி நாங்கள் தாக்குதல் நடத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிந்து நதியில் ஒப்பந்தத்தை மீறி எந்த ஒரு கட்டமைப்பையும் இந்தியா உருவாக்க முயற்சித்தால் அதை தகர்ப்போம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சமீபத்தில் கூறியிருந்த நிலையில், முகமது காலித் ஜமாலி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

x