கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து, வெடிபொருட்கள், ஆயுதங்கள் வைத்திருப்போர் உயிர் பறிக்கப்படும் என்று ஆங்கிலேயர் வெளியிட்ட செப்பேடு, விருதுநகர் அருகேயுள்ள பாவாலி கிராமத்தில் இன்றும் அதன் தன்மை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் அருகே உள்ள சிறப்புமிக்க ஊர்களில் ஒன்று பாவாலி கிராமம். தலைக் கிராமம் என்று அழைக்கப்படும் பாவாலி கிராமம், பல நூறு ஆண்டுகள் கடந்த பாரம்பரியம் கொண்டது. ஜமீன் கட்டுப்பாட்டில் பாவாலி இருந்தபோது, திருநெல்வேலி சீமையை ஆண்ட ஆங்கிலேய துரை மேஜர் பேனர்மேன் என்பவரின் அறிவிப்பு செப்பேடு ஒன்று கடந்த 1799ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியில் பாவாலி கிராமத்தில் கல்தூண் ஒன்றில் பதிக்கப்பட்டது.
கட்டபொம்மனை தூக்கிலிடப்பட்டதற்குப் பிறகு, யாரேனும் வெடி மருந்துகள், ஆயுதங்கள், பீரங்கிகள் போன்றவை வைத்திருந்தால், அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தமிழில் செப்பேடு செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதில், "இனிமேல் யாதொரு பாளையக்காரனும் வரி, வட்டி, கோட்டை கொத்தளம் முடையங்கள் போட்டாலும், பீரங்கி, ரேக்குகள், கொடி மரங்கள் வைத்திருந்தாலும், கத்தி, ஈட்டி இவைகளை வைத்திருந்தாலும், அவர்கள் கும்பனி (ஆங்கிலேயர் நிறுவனம்) ஆதரவுகளை இழந்து, அவர்களின் பாளையப்பட்டுக்களை கும்பனியார் தட்டிக்கொண்டு, கும்பனியாருடைய எதிரி என்று தண்டிக்கப்படுவர்.
பாளையப்பட்டுகளில் உள்ள சேவைக்காரர், சேவுகர்கள், காவல்காரர்கள், குடியானவர்கள் யாவரானும் கல்வெடி, திரிவெடி, ஈட்டி, வல்லையம், பிடிகத்தி, பிக்காஸ்கனைகள் போன்றவைகளை பதுக்கினாலும், வைத்திருந்தாலும் அந்த பாளையக்கார்களே தண்டிக்கப்படுவர். இவர்கள் யார் தவறு செய்தாலும் பாளையக்காரர்களே பொறுப்பு என்று உத்திரவாதம் செய்யவேண்டும். இதை மீறி தடை செய்யப்பட்ட ஆயுதங்களை கண்டால், பிடிபட்டவர்களின் உயிர் சேதம் செய்யப்படும். இந்த பாளையப்பட்டுக்கள் தட்டப்படும்" என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து ராஜபாளைம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் கந்தசாமி கூறியதவாது: பாவாலி கிராமத்தில் மட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள கொள்ளப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் இதுபோன்று ஆங்கிலேயரின் செப்புத் தகடுகள் இருந்தன. உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் காலப்போக்கில் அவை சிதைந்து விட்டன.
பாவாலி கிராமத்திலும் பல ஆண்டுகள் பராமரிப்பின்றிக் கிடந்த செப்புத் தகட்டை, கிராமத்தினர் சில ஆண்டுகளுக்கு முன்பு மீட்டுருவாக்கம் செய்து, சுற்றுச்சுவருடன் மேடை அமைத்து, அதில் செப்பேடு பதிக்கப்பட்ட கல்தூணை நட்டு வைத்துள்ளனர். மேலும், செப்பேட்டில் உள்ள தமிழ் எழுத்துகள் சற்று படிப்பதற்கு கடினமாக இருப்பதால், அதை புரியும்படி கல்வெட்டில் செதுக்கி அருகில் உள்ள சுவரில் பதித்து வைத்து பாதுகாத்து வருவதாகத் தெரிவித்தார்.