புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பாகிஸ்தானில் இருந்து உற்பத்தியாகும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது, மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு விதிவிலக்கு தேவை என்றால் மத்திய அரசின் முன் ஒப்புதல் அவசியம்’ என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் ஏப்ரல் 22-ம் தேதியிலிருந்து பாகிஸ்தான் பங்குச் சந்தை வர்த்தகத்திலும் எதிரொலித்து வருகிறது.
இதுவரை கேஎஸ்இ-100 குறியீடு 8,000 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 30 வரையிலான காலகட்டத்தில் மட்டும் பாகிஸ்தான் பங்குச் சந்தை 6.09 சசதவீத சரிவை சந்தித்துள்ளது.