இஸ்லாமாபாத்: காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் ஏப்ரல் 22-ம் தேதியிலிருந்து பாகிஸ்தான் பங்குச் சந்தை வர்த்தகத்திலும் எதிரொலித்து வருகிறது.
இதுவரை கேஎஸ்இ-100 குறியீடு 8,000 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 30 வரையிலான காலகட்டத்தில் மட்டும் பாகிஸ்தான் பங்குச் சந்தை 6.09 சசதவீத சரிவை சந்தித்துள்ளது.
ஏப்ரல் மாத இறுதிநாளான கடந்த புதன்கிழமை பாகிஸ்தான் பங்குச் சந்தை குறியீட்டெண் கேஎஸ்இ-100 ஒரே நாளில் 3.09 சதவீதம் சரிந்தது. அதாவது 3,545 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 1,11,326 புள்ளிகளில் நிலைத்தது.
முக்கிய நிறுவனங்களான லக், என்க்ராக், யுபிஎல், பிபிஎல், எப்எப்சி ஆகியவற்றின் குறியீடு 1,132 புள்ளிகள் வரை குறைந்தது. இந்த நிலையில், நேற்றைய வர்த்தகத்தில் பாகிஸ்தான் பங்குச் சந்தைகள் கணிசமான இழப்பிலிருந்து மீண்டு 2,000-க்கும் அதிகமான புள்ளிகள் வரை உயர்ந்தது.