இடைநிற்றலை அதிகரிக்க செய்யும்: சிபிஎஸ்இ கட்டாய தேர்ச்சி முறை ரத்து குறித்து அன்பில் மகேஸ் கருத்து


திருச்சி: பள்ளியில் 3-ம் வகுப்பிலேயே மாணவர்களை தோல்வியடையச் செய்தால், அது பள்ளி இடைநிற்றலை அதிகரிக்கும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தில் 3, 5, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும் என்ற தேசிய கல்விக் கொள்கை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு பெரிய அழுத்தத்தை தரும். இந்த அழுத்தத்தை சிறு வயது குழந்தைகள் எப்படி தாங்கிக் கொள்வார்கள்? 3-ம் வகுப்பிலேயே மாணவர்களை தோல்வியடையச் செய்தால், அவர்கள் இந்த கல்வித் திட்டத்தில் இருந்தே வெளியேறிவிடுவார்கள். இது பள்ளி இடைநிற்றலைத் தான் அதிகரிக்கும். அதனால்தான் தமிழக முதல்வர் தொடர்ந்து தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து வருகிறார்.

செயற்கை நுண்​ணறி​வு கல்வி: தரமான கல்வியைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். 6-ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவுக் கல்வி அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் மூலமாக மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும்போது, அதற்கு பெற்றோர் எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும். சிபிஎஸ்இ பயிலும் மாணவர்களின் பெற்றோர், தங்களுடைய பிள்ளைகள் பயிலும் பள்ளிகளில் இந்த நடைமுறைக்கு ஒப்புதல் அளிக்காமல், எதிலும் கையெழுத்து போடாமல் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலின்படி கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதற்கு எதிராகவே தற்போது மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்ன தேவை என்பதை அந்தந்த மாநிலம்தான் அறியும். பெரியண்ணன் மனப்பான்மையுடன், நாங்கள் கூறுவதைத்தான் மாநிலங்கள் செய்ய வேண்டும் என்ற வகையில் மத்திய அரசு செயல்படக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

x