கொளுத்தி எடுக்கும் வெப்ப அலையிலிருந்து தப்பிக்க என்ன வழி? - இதோ சூப்பர் டிப்ஸ்!


சென்னை: வெப்ப அலையிலிருந்து தங்களை முழுமையாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சில நாட்களுக்கு வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே, வெப்ப அலையிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதன்படி, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்வதைத் தவிர்த்தல் வேண்டும். தாகம் ஏற்படாமல் இருந்தாலும், உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கத் தேவையான அளவு தண்ணீர் பருகுதல் வேண்டும்.

வெளிப்புறங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் உள்ளே குழந்தைகளைத் தனியே விட்டு விட்டுச் செல்லாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். வெளியிடங்களில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை செய்வதை தவிர்த்துவிட வேண்டும். விவசாயிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் திட்டமிட்டு தங்களுக்கான பணிகளைச் செய்தல் வேண்டும்.

கோடைக் காலம் முழுவதும் துரித உணவு வகைகள் மற்றும் காரமான உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்தல் வேண்டும். வெளியே செல்லும் போது கருப்பு கண்ணாடி அணிந்தும் மற்றும் சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்தியும் செல்லலாம். இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வதை முடிந்தவரை தவிர்த்துவிடல் வேண்டும். வெளியில் செல்லும் போது தண்ணீர் பாட்டில்களை உடன் கொண்டு செல்லவும்.

உடலைக் குளுமையாக வைத்துக் கொள்ள மின் விசிறி, ஈரமான துணி பயன்படுத்துதல், குளிர்ச்சியான நீரைப் பயன்படுத்தி குளியல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். கோடைக் காலங்களில் உடலில் ஏற்படக் கூடிய நீர்ச்சத்து இழப்பைத் தடுக்கும் வண்ணம் உப்பு-சர்க்கரை கரைசல், இளநீர், இயற்கை குளிர்பானங்களான பழச்சாறுகள், அரிசிக் கஞ்சி, எலுமிச்சை சாறு, மோர் போன்ற பானங்களைப் பருக வேண்டும்

x