கன்னியாகுமரி: முக்கடல் சங்கமத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை, மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை ஆகியவை பயன்பாடற்ற நிலையில் பூட்டியே கிடக்கின்றன.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கோடை சீஸன் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குழந்தைகளுடன் கன்னியாகுமரி, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், வட்டக் கோட்டை உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா மையங்கள் களைகட்டியுள்ளன.
குறிப்பாக, சுற்றுலா பயணிகள் அதிகமானோர் கூடும் பகுதியாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் படகு இல்லம் பகுதி உள்ளது. கடலில் படகு பயணம் மேற்கொண்டு விவேகானந்தர் பாறைக்கு சென்று அங்கிருந்து கண்ணாடி இழை பாலத்தில் நடந்தவாறு திருவள்ளுவர் சிலைக்கு சென்று வருவதில் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதைப்போல், கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயம் பார்ப்பதற்கு அதிகாலையில் பல்லாயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் கூடுகின்றனர். மேலும், முக்கடல் சங்கமத்தில் புனித நீராடவும் ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், முக்கடல் சங்கம கடற்கரை வளாகத்தில் கட்டண கழிப்பறை, குளிக்கும் அறை ஆகியவை உள்ளது. இதன் அருகே மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறையும், அதை அடுத்து தாய்மார்கள் பால் ஊட்டும் அறையும் உள்ளது.
ஆனால், இவை இரண்டும் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. கோடை சீஸனில் கூட இதை திறக்காததால் மாற்று திறனாளிகளும், கைக்குழந்தைகளுடன் வரும் பாலூட்டும் தாய்மார்களும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து, சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகையில்; இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரிக்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர். ஆனால், ஒரு சர்வதேச சுற்றுலா தலத்துக்கான அடிப்படை வசதிகள் இங்கு இல்லாதது சுற்றுலா பயணிகளை மனவேதனை அடையச் செய்துள்ளது.
இங்கு சுற்றுலா வரும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கான கழிப்பறை சீஸன் நேரத்தில் கூட திறக்கப்படவில்லை. அத்துடன் அதில், `ஊனமுற்றோர் கழிப்பறை` என்ற வாசகத்தை பயன்படுத்தி யுள்ளனர். இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது. மாற்றுத் திறனாளிகள் என்றே பயன்படுத்தும் நடைமுறை உள்ளது. இந்நிலையில், இதைக்கூட அதிகாரிகள் கவனிக்கவில்லை. இது போல், தாய்மார்கள் பாலூட்டும் அறை பூட்டிய நிலையில் பயனற்று கிடக்கிறது. இதை கோடை சீஸனான இப்போது திறக்காமல், எப்போது தான் திறக்கப் போகிறார்களோ? என்றனர்.