தஞ்சாவூர்: புதிதாக உருவான புதுப்பட்டினம் கடற்கரைக்கு (பீச்) நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். எனவே, அங்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் முதல் சேதுபாவா சத்திரம் வரை 43 கி.மீ. நீளத்துக்கு கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம் ஆகிய 2 இடங்களில் மீன்பிடித் தலங்கள் உள்ளன. இப்பகுதியில் 30 மீனவ கிராமங்கள் உள்ளன. அதில், மல்லிப்பட்டினம் அருகேயுள்ள மனோரா சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. அதை தமிழக தொல்லியல் துறையும், மாவட்ட சுற்றுலாத் துறையும் பராமரித்து வருகின்றன.
இந்நிலையில், உள்ளூர் மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த புதுப்பட்டினம் கடற்கரை பகுதிக்கு, கரோனா ஊரடங்குக்கு பின்னர், பிற பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வந்துசெல்ல தொடங்கினர். இதன் காரணமாக, 2020-ம் ஆண்டு முதல் புதுப்பட்டினம் கடற்கரை பகுதி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து, அங்கிருந்த கரடுமுரடான சாலையை மண் சாலையை செப்பனிட்டு கொடுத்ததுடன், அப்பகுதியில் இருந்த சீமைக் கருவேல மரங்களை அகற்றி, பொதுமக்கள் வந்துசெல்ல ஏதுவான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துகொடுத்தது. இதனால், ஆர்ப்பரில்லாத கடல் அலைகள், வெள்ளி மணல், தென்னை, சவுக்கு மர நிழல்கள், பரந்து விரிந்த பரப்பளவு ஆகியவற்றை ரசித்து, அனுபவிப்பதற்காக பொதுமக்கள் அதிகளவில் வரத் தொடங்கினர்.
தற்போது, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த கடற்கரைக்கு வந்து கடல் அழகை ரசிப்பது, கடலில் குளிப்பது, குதிரை சவாரி என பல்வேறு பொழுது போக்குகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இங்கு வந்து செல்லும் மக்களுக்காக, உள்ளூர் கிராம நிர்வாகம் சார்பில், சிறிய அளவிலான தின்பண்ட கடைகள், விளையாட்டு பொருட்கள் விற்பனை கடைகள் உட்பட பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இங்கு தெருமின் விளக்கு உள்ளிட்ட மின்சார வசதி, வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, குடிநீர் போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. கடற்கரைக்கு வந்துசெல்லும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் குப்பை ஆங்காங்கே தேங்கி, கடற்கரையின் அழகை கெடுத்து வருகிறது. இந்த குப்பையை தினமும் அகற்றி சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த வேண்டும்.
கடற்கரைக்கு செல்லும் சாலை குறுகிய அளவில் குண்டும் குழியுமாக காணப்படுவதால், அதை அகலப் படுத்தி தரமாக அமைக்க வேண்டும். காவல் துறை சார்பில் பூத் அமைத்து, தினமும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். இந்தக் கடலில் கடற்பசுக்கள் இருப்பதால், அவற்றுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சுற்றுச் சூழலை மேம்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடலில் குளிக்கக் கூடிய ஒரே இடம் புதுப்பட்டினம் கடற்கரைதான். இதை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு விடுமுறை நாட்களில் 10 ஆயிரம் பேரும், மற்ற நாட்களில் 5 ஆயிரம் பேரும் வந்துசெல்கின்றனர்.
குறிப்பாக சாலை, மின் விளக்கு வசதி, உடைகள் மாற்றும் இடம், வாகனங்கள் நிறுத்துமிடம், பொது மக்கள் அமரும் இடம், கழிப்பறை, குடிநீர் வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித் தருவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அதேபோல, இந்த கடற்கரையை அனைத்து வசதிகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாக மாற்ற எம்எல்ஏ நா.அசோக் குமார் முழு முயற்சி எடுத்து வருகிறார். விரைவில், இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.