கைதிகளை சந்திக்க தொலைபேசி மூலம் முன் அனுமதி: திருச்சி மத்திய சிறையில் அறிமுகம்


திருச்சி: மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள், பலமணி நேரம் காத்துக்கிடப்பதை தவிர்க்கும் வகையில், தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்று பார்க்க வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை புழல், கோவை, மதுரை, சேலம், கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை, வேலூர் உட்பட 9 இடங்களில் மத்திய சிறைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள தண்டனை, விசாரணைக் கைதிகளை, வழக்கறிஞர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் சந்திக்க திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இதற்காக அவர்கள் நேரில் வந்து விண்ணப்பித்து, நீண்ட நேரம் காத்திருந்து பார்க்க வேண்டிய நிலை இருந்தது. மேலும், கைதிகளை பார்க்க வருபவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அனுமதிப்பதாகவும், அவர்கள் கொண்டு வரும் பொருட்களை பறித்துக் கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர் தயாள் உத்தரவின்பேரில், கைதிகளை பார்க்க விஎம்எஸ் (விசிட்டர் மேனேஜ்மென்ட் சிஸ்டம்) என்ற முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, சிறைக்கு பிரத்யேக தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தண்டனை அல்லது விசாரணைக் கைதிக்கு சிறை அடையாள எண் (பிஐடி எண்) வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கைதி வழங்கியுள்ள குடும்பத்தினரின் செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கைதியை பார்க்க விரும்புபவர்கள், அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, கைதியின் பிஐடி எண்ணை குறிப்பிட்டு, குறைந்தது ஒருநாள் முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டும்.

அதன்படி, சென்னை புழல், சேலம் போன்ற மத்திய சிறைகளைத் தொடர்ந்து, திருச்சி மத்திய சிறையிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளை பார்க்க விரும்புவர்கள் 0431 2333644, 0431 2331008 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, கைதியின் பிஐடி எண்ணை குறிப்பிட வேண்டும். அதன்பின், கைதியை எப்போது சந்திப்பது என்ற விவரம் தெரிவிக்கப்படும்.

அதன்படி, வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை கைதிகளை சந்திக்கலாம். கண்ணாடி அறையில் இண்டர்காம் வசதியுடன் அரைமணி நேரம் கைதியுடன் பேசலாம். அதேபோல, கைதிகளுக்கு வழங்கப்படும் தின்பண்டங்க ள் உள்ளிட்ட பொருட்கள், பையில் வைத்து அவர்களது பிஐடி எண் மற்றும் பையில் உள்ள பொருள்கள் பட்டியலோடு கைதிகளுக்கு சென்றுவிடும்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு செய்யலாம். ஒருநாளைக்கு ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே பதிவு செய்ய முடியும். அதன்படி, தினமும் 212 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வழக்கறிஞர்கள் பிற்பகல் 2.45 மணி முதல் 4.45 மணி வரை கைதிகளை சந்திக்கலாம்.

இதுகுறித்து வழக்கறிஞர் முத்துக்குமார் கூறியபோது, திருச்சி மத்தியச் சிறையில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த முறை வரவேற்கத்தக்கது. இதனால் அலைச்சல், நேரம் குறையும். லஞ்சம் உள்ளிட்ட விஷயங்கள் தடுக்கப்படும். ஆனால், பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை. சிறையில் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை ஒட்டி வைத்துள்ளனர். இதனால் மனு நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருவதை பார்க்க முடிகிறது என்றார்.

வீடியோ காலில் பேசலாம்!: கைதிகளை நேரடியாக வந்து சந்திக்க இயலாதவர்கள் இ-பிரிசன் என்ற இணைய முகவரியில் பதிவு செய்வதின் மூலம், வீடியோ கால் மூலம் அழைத்து பேசலாம். ஆனால், ஒரேநாளில் நேரிலும், வீடியோ கால் மூலமும் கைதிகளிடம் பேச முடியாது என்கின்றன ர் சிறைத் துறை அதிகாரிகள்.

x