சுருங்கிக்கொண்டே வரும் மதுரை செல்லூர் கண்மாய்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை


மதுரை: நாளுக்கு நாள் சுருங்கிக்கொண்டே செல்லும் செல்லூர் கண்மாயை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாநகரத்தில் மாடக்குளம் கண்மாய், வண்டியூர் கண்மாய், தென்கால் கண்மாய், நிலையூர் கண்மாய் அடுத்து செல்லூர் கண்மாய் மிகப்பெரிய கண்மாயாக இருந்தது. தற்போது, இந்த கண்மாய் சுருங்கிக்கொண்டே வருகிறது. பீ.பி குளம் கண்மாய் காணாமல் போனது போல், இந்த கண்மாயும் ஒரு காலத்தில் காணாமல் போக அதிக வாய்ப்புள்ளது என்றும், மாவட்ட நிர்வாகம் இந்த கண்மாயை காப்பாற்ற வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்நிலைகள் அமைப்பைச் சேர்ந்த அபுபக்கர் கூறுகையில், ”தற்போது இந்த செல்லூர் கண்மாயில் ஆக்கிரமிப்புகள் பெருகி வருகின்றன. கண்மாய் கரையில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு ஊரே உருவாகிக் கொண்டு இருக்கிறது. கண்மாய் வடக்கு, மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் இருந்தும் கழிவுநீர் தினந்தோறும் அதிகளவில் கலந்து கொண்டு இருக்கிறது.

இதனால், கண்மாய் நீர் நிறம் மாறி கருப்பாக உள்ளது. கழிவுநீர் கலப்பதால் கண்மாய் முழுவதுமே ஆகாயத் தாமரை படர்ந்து இருக்கிறது. மேலும், துர்நாற்றம் வீசுவதுடன் மீன்கள் செத்து மிதக்கின்றன. இக்கண்மா யை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

x