ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் செல்லும் ரயிலில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் மொபைல் போனில் செல்ஃபி படம் எடுப்பது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அண்மைக் காலமாக ரயிலின் கூரை மீது ஏறியும், ஓடும் ரயிலில் படிகளில் நின்றபடி தொங்கிக் கொண்டும், ரயில் சற்று தொலைவில் வந்து கொண்டிருக்கும்போது தண்டவாளத்தில் நின்று கொண்டும் மொபைல் போனில் செல்ஃபி போட்டோ எடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த படங்களை சமூக வலை தளத்தில் ‘டேரிங் செல்ஃபி’ எனும் பெயரில் பதிவிட்டு பிரபலமாகும் நோக்கோடு சிலர் இத்தகையை ஆபத்தான சாகசங்களை மேற்கொள்கின்றனர்.
இது போன்ற சாகசங்களின் போது பலர் உயிரிழந்துள்ளனர், சிலர் படுகாயமடைந்து நிரந்தர ஊனமடையும் அளவுக்கு உடல் நிலை பாதிக்கப் பட்டுள்ளன. எனினும், இதுபோன்ற அபாயகரமான சாகசங்களில் இளைஞர்கள் ஈடுபடுவது தொடர்கிறது. கடந்த ஏப். 6ம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்பட்டது.
கடல் வழியாக இப்பாலத்தின் மீது ரயில் செல்லும் வீடியோ காட்சியை சமூக வலை தளங்களில் பார்த்து கவரப்பட்டு, ராமேசுவரத்துக்கு சுற்றுலா வரும் பலர் ரயிலில் செல்ஃபி எடுக்க அதிக ஆர்வம் காட்டு கின்றனர். கடல் வழியாக சென்று ரயில் கொண்டிருக்கும் போது படிக்கட்டுகளில் நின்றபடி செல்ஃபி எடுக்கின்றனர். இதை தடுக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை விட, தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுக்கும் போது விபத்து ஏற்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ரயில் நிலைய வளாகம், நடைமேடை, ரயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. ரயில் பயணங்களின் போது ஆபத்தான செல்ஃபிகளை பயணிகள் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.