பழநி மலைக்கோயில் - இடும்பன் மலை இடையே ரோப் கார் சேவை: ரூ.154 கோடியில் திட்ட மதிப்பீடு!


பழநி மலைக்கோயிலுக்கு எளிதில் செல்ல ‘ஃபனிகுலர் வின்ச்’ (மின் இழுவை ரயில்) அமைக்க ரூ.67 கோடி, திண்டுக்கல்: பக்தர்களின் வசதிக்காக பழநி மலைக்கும், இடும்பன் மலைக்கும் இடையே ரோப் கார் அமைக்க ரூ.87 கோடி என மொத்தம் ரூ.154 கோடிக்கு திட்ட மதீப்பீடு தயார் செய்து அரசின் ஒப்புதல் பெற தேவஸ்தானம் அனுப்பி உள்ளது.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தரைமட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 690 படிகளை கடந்து கோயிலுக்குச் செல்ல வேண்டும். பக்தர்கள் எளிதில் மலைக்கோயிலுக்குச் செல்ல 1966, 1981 மற்றும் 1982ல் என மொத்தம் 3 மின் இழுவை ரயில் (வின்ச்) சேவை தொடங்கப்பட்டது. இவற்றின் மூலம் பக்தர்கள் 8 நிமிடத்தில் மலைக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். இந்த 3 வின்ச் ரயில்கள் மூலம் மணிக்கு 400 பேர் வரை செல்லலாம்.

இதைத் தொடர்ந்து, கடந்த 2004ல் ரோப் கார் (கம்பி வட ஊர்தி) சேவை தொடங்கப்பட்டது. இதில் 3 நிமிடங்களில் மலைக்கோயிலை அடையலாம். ரோப் கார் மூலம் மணிக்கு 240 பேர் மலைக்கோயிலுக்கு சென்று வர முடியும். பழநி மலையின் இயற்கை எழிலை ரசித்தபடி செல்ல விரும்பும் பக்தர்கள், ரோப் காரை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதனால் வின்ச் மற்றும் ரோப் காரில் செல்ல குறைந்தது 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்க, 2019ல் அதி நவீன தொழில் நுட்பத்துடன் ஒரு மணி நேரத்துக்கு 1,200 பக்தர்கள் மலைக் கோயிலுக்கு சென்று வரும் வகையில் 2-வது ரோப் கார் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பின்னர் அத்திட்டம் கரோனா உள்ளிட்ட காரணங்களால் ஆரம்ப நிலையிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஃபனிகுலர் வின்ச் ரயில்: இந்நிலையில் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்லும் வகையில் ‘ஃபனிகுலர் வின்ச்’ ரயில் (Funicular winch) (மின் இழுவை ரயில்) அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் சப்தஸ்வரங்கி தேவி கோயிலுக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள ‘ஃபனிகுலர் வின்ச்’ ரயில் போன்று, பழநியில் முதல் ரோப் கார் அருகிலேயே அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வின்ச் ரயில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பொறுப்பை, ஹரியானா மாநிலம் குரு கிராமில் உள்ள ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் நிறுவனம் பொறுப்பேற்றது.

அந்நிறுவனம் புவி தொழில்நுட்ப ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவில் ‘ஃபனிகுலர் வின்ச்’ வின்ச் ரயில் அமைக்க சாத்தியக்கூறுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ரூ.67 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வின்ச் ரயிலில் அடிவாரத்தில் இருந்து 90 விநாடிகளில் 80 பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல முடியும்.

இரு மலைகளுக்கு இடையே ரோப் கார்: பழநி மலையை போல், பழநி சிவகிரிபட்டியில் கொடைக்கானல் சாலையில் இடும்பன் மலை உள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து இடும்பன் கோயிலுக்கு மொத்தம் 540 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். அதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர். மேலும் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழா காலங்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். எனவே, பழநி மலைக்கு வரும் பக்தர்கள், இடும்பன் மலைக்குச் சென்று வர வசதியாக பழநி மலைக்கும், இடும்பன் மலைக்கும் இடையே ரோப் கார் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் 2023ல் இந்து சமய அறநிலையத் துறையின் மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேகர் பாபு ரூ.32 கோடியில் பழநி மலைக்கும், இடும்பன் மலைக்கும் இடையே ரோப் கார் அமைக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, கடந்த சில மாதங்களாக ஆய்வு நடத்தி புதிய ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, புதிய ரோப் கார் அமைக்க ரூ.87 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய வின்ச் ரயில் மற்றும் ரோப் கார் அமைக்க மொத்தம் ரூ.154 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப் பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ளது. அரசு ஒப்புதல் தந்தவுடன், இரு திட்டங்களுக்கும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, 3 மாதங்களுக்குள் பணிகள் தொடங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

x