‘ஹீட் ஸ்ட்ரோக்’ அச்சம் - வெப்ப தாக்கத்திலிருந்து தப்புவது எப்படி? - அலர்ட் குறிப்புகள்!


கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் ஹீட் ஸ்ட்ரோக் ( வெப்ப பக்கவாதம் ) ஏற்படும் சூழலும், அதனால் உயிரிழப்புகளும் நிகழும் அபாயமும் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஹீட் ஸ்ட்ரோக் வராமல் தற்காத்துக் கொள்வது எப்படி?

சாதாரண மனித உடலின் வெப்பநிலை 36.4°சி முதல் 37.2°சி வரை இருக்கும். அதிக சூரிய வெப்பத்தால் அயர்ச்சி மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஹீட் ஸ்ட்ரோக் என்பது உயிருக்கு ஆபத்தான நிலையாகும். இது உடல் அதிக வெப்ப வெளிப்பாட்டை கையாள முடியாத போது ஏற்படுகிறது.

பொதுவாக ஹீட் ஸ்ட்ரோக், உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து வெப்ப நிலை அதிகரிப்பதால் ஏற்படக்கூடியது. உடல் சூடு 40 டிகிரிக்கு மேல் அதிகரிக்கும்போது நீர்ச்சத்து குறைந்து, சோர்வு, தளர்வு, தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஆகியவை வரும்.

வெயிலில் பணிபுரியும் போது உடல் சோர்வு, தளர்வு இருந்தால் நீர் அருந்தி காற்றோட்டமான இடத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். தலை சுற்றல் அறிகுறி இருந்தால் உடனடியாக ஓய்வு எடுக்க வேண்டும். அதையும் மீறி தொடர்ந்து வேலை செய்தால் மயக்கம் ஏற்பட்டு உடலில் உள்ள உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

வெயில் அதிகமுள்ள நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே செல்லக் கூடாது. தவிர்க்க முடியாத காரணங்களின் போது குடை எடுத்துச் செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்த்து கார், ஆட்டோக்களில் செல்ல வேண்டும்.

குழந்தைகள், சிறுவர்கள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதர உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதன் மூலம் ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்

உடனடியாக செய்யவேண்டியது என்ன?

ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக குளிர்ந்த, நிழலான பகுதிக்கு மாற்றி அதிகப்படியான ஆடைகளை அகற்றி, பாதங்களை சற்று உயர்த்தி படுக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் விழிப்புடன் இருந்தால், குடிக்க முடிந்தால் குளிர் திரவங்களை வழங்கலாம். அதுபோல தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, உப்பு நீர் கரைசல் ( ஓஆர்எஸ் ) அல்லது குளிர்ந்த நீரை சுயநினைவு உள்ளவர்களுக்கு மட்டும் குடிக்க வழங்க வேண்டும்.

ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவின்றி இருந்தால் அவரை விரைவாக குளிர்விப்பது மிக முக்கியமான முதலுதவி ஆகும். அதற்கு அவரின் ஆடைகளை தளர்த்தி குளிர்ந்த நீரினை உடம்பில் ஒற்றி எடுக்கவும், குறிப்பாக அக்குள் மற்றும் கவட்டியில் ஈரத்துண்டு, ஐஸ் பேக் மூலம் ஒற்றி எடுக்கவும், மின்விசிறியின் காற்று உடலில்படும் படி வைக்க வேண்டும். குளிர்சாதன அறை கிடைக்குமாயின் அதனை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

x