தரிசு நிலத்தில் இளைஞர்கள் உருவாக்கிய குறுங்காடு... பெரம்பலூரில் ஆச்சர்ய சாதனை!


பெரம்பலூர்: வேப்பூர் ஒன்றியம் நமையூர் கிராமத்தில் வெளிநாடு வாழ் நண்பர்கள், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன், குறுங்காட்டை உருவாக்கியுள்ளனர் அப்பகுதி இளைஞர்கள்.

பருவ நிலை மாற்றம் காரணமாக உலகமெங்கும் வெப்பம் அதிகரித்து வருகிறது. மேலும், போதிய மழை இல்லாததால் பல்வேறு பிரச்சினைகளை யும் மக்கள் சந்தித்து வருகின்றனர். இதையடுத்து, மரம் வளர்த்து பசுமை பரப்பை அதிகரிப்பது மட்டுமே இதற்கான முக்கிய தீர்வு என அறிவியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதை உணர்ந்த பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நமையூர் கிராம மக்கள் 2018ம் ஆண்டு ஊரில் தரிசாக கிடந்த இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் குறுங்காடு உருவாக்க முடிவு செய்தனர்.

தொடர்ந்து, நமையூர் கிராம இளைஞர்கள், இந்து சமய அறநிலையத் துறையின் ஒத்துழைப்புடன் தரிசு நிலத்தில் இருந்த களைகளை நீக்கி நிலத்தை சீர் செய்தனர். நமையூர் கிராமத்தில் இருந்து வெளிநாடு சென்று பணி செய்து வரும் இளைஞர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து குறுங்காட்டை உருவாக்கு வதற்காக ரூ.1.80 லட்சம் நிதி சேகரித்தனர். அதே ஆண்டு ஆலமரம், அரசமரம், மாமரம், புளியமரம், இலுப்பை, வேம்பு, மகாகனி, நாவல், மூங்கில், நீர்மருது, புங்கன், பூவரசு, வாகை உள்ளிட்ட 17 வகையான 600 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

அந்த மரக் கன்றுகளுக்கு தொடர்ந்து நீரூற்ற ஆழ்துளை கிணறு ஒன்றையும் அமைத்து பராமரித்து வந்தனர். வேலைப் பளு காரணமாக மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற இயலாத சந்தர்ப்பங்களில் கூலி ஆட்களை நியமித்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர். இளைஞர்களின் விடாமுயற்சியுடன் கூடிய உழைப்பின் பலனாக 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இப்போது மரங்களாக வளர்ந்து காய், கனிகளுடன் பூத்துக் குலுங்குகின்றன.

இந்த குறுங்காடு பொதுமக்களும், கால்நடைகளும் இளைப்பாறும் இடமாகவும், பறவைகள் உள்ளிட்ட பல்லுயிர்களின் வாழ்விடமாகவும் மாறியுள்ளது. இங்கு மரங்களில் இளைப்பாற வரும் பறவைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தரிசாக பயனற்றுக் கிடந்த நிலத்தை குறுங்காடாக மாற்றிய இளைஞர்களின் முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

x