ஊர்ந்து செல்லும் பேருந்துடன் 1 கி.மீ. நடந்து செல்லும் பயணிகள்: கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி


கிருஷ்ணகிரி: அஞ்செட்டி அருகே நாட்டறாம்பாளையம் மலைப்பாதை சாலையில் ஏற முடியாமல் சிரமத்துடன் ஊர்ந்து செல்லும் பேருந்துடன் பயணிகள் 1 கிமீ தூரம் சாலையில் நடந்து செல்லும் நிலையுள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியைச் சுற்றி கோட்டையூர், உரிகம், தக்கட்டி, தொட்டமஞ்சி, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பல்வேறு பணிகள் மற்றும் மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகளுக்கு பென்னாகரம், தருமபுரி, சேலம் ஆகிய ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில், மாலை நேரத்தில் தருமபுரியிலிருந்து அஞ்செட்டிக்கு ஒரு அரசுப் பேருந்து மட்டுமே உள்ளது. இதனால், தருமபுரிக்கு பல்வேறு பணிக்குச் செல்வோர் ஒரே நேரத்தில் அப்பேருந்தில் பயணம் செய்யும் நிலையுள்ளது. இதனால், அந்த பேருந்தில் 120-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்கின்றனர்.

கூடுதல் பயணிகளுடன் வரும் இப்பேருந்து மலையில் ஏற முடியாமலும், வளைவுகளில் திரும்ப முடியாமலும் சிரமத்தைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக பிலிகுண்டுலு வழியாக நாட்றாம்பாளையம் செல்லும் சாலையில் பேருந்து சாலையைக் கடக்க முடியாமல் நின்று விடுகிறது. பின்னர் பேருந்தில் உள்ள பயணிகள் கீழே இறக்கி சுமார் 1 கிமீ தூரத்தில் உள்ள சமமான சாலைக்கு ஊர்ந்து செல்லும் பேருந்துடன் பயணிகள் நடந்தே சாலையைத் தினசரி கடந்து வருகின்றனர். அதன்பின்னர் பேருந்தில் ஏறி பயணம் செய்யும் நிலை தொடர்ந்து வருகிறது.

இது தொடர்பாக மலைக் கிராம மக்கள் கூறியதாவது: தருமபுரியிலிருந்து அஞ்செட்டிக்கு மதியம் 1.10 மற்றும் மாலை 4.10 மணிக்கு அரசுப் பேருந்து உள்ளது. பென்னாரகத்திலிருந்து அஞ்செட்டிக்கு இரவு 8.30-க்கு பேருந்து உள்ளது. இப்பேருந்தும் சில நாட்கள் வருவதில்லை. இதனால், அஞ்செட்டி பகுதியிலிருந்து தருமபுரி, பென்னகரத்துக்கு செல்வோர் பணிகளை வேகமாக முடித்துக் கொண்டு தருமபுரியில் 4.10 மணிக்குப் புறப்படும் பேருந்தில் பயணம் செய்ய வேண்டியது உள்ளது. இதனால், இப்பேருந்தில் கூட்டம் அதிகம் காரணமாகப் பேருந்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் நின்றபடி பயணம் செய்யும் நிலையுள்ளது.

மேலும், இப்பேருந்து பிலிகுண்டுலு அருகே நாட்றாம்பாளையம் செல்லும் மலைப் பாதை சாலையில் ஏற முடியாமல் நின்று விடுகிறது. இதனால், 1 கிமீ தூரம் பயணிகள் கீழே இறங்கி நடந்து சென்று மீண்டும் பேருந்தில் ஏறிச் செல்லும் நிலையுள்ளது.

எனவே, மாலை மற்றும் இரவு நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கினால், கூட்ட நெரிசலின்றியும், சிரமமின்றியும் செல்லும் வாய்ப்பு ஏற்படும். எங்கள் ஊர்களுக்கு நகரப் பேருந்துகள் இயக்கம் இல்லாததால், மகளிர் விலையில்லா பேருந்து பயணத்தில் செல்ல முடியாத நிலையுள்ளது. எனவே, நகரப் பேருந்துகளை இயக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x