திண்டுக்கல்: மகாராஷ்டிரா, கர்நாடகாவில் இருந்து விதையில்லா பச்சை திராட்சை பழங்கள் வரத்து அதிகரிப்பு காரணமாக, திண்டுக்கல்லில் பன்னீர் திராட்சை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சை சாகுபடியாகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சீசன் காலங்களில் தினமும் 2 டன் முதல் 5 டன் வரை விற்பனைக்கு வரும். பருவ நிலை மாற்றம் காரணமாக தற்போது திண்டுக்கல்லில் பன்னீர் திராட்சை மகசூல் அதிகளவு பாதித்துள்ளது. அதனால் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து விதையில்லா (சீட்லஸ்) பச்சை திராட்சை பழங்கள், திண்டுக்கல் மாவட்டத்துக்கு அதிகளவில் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன.
ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரையும் விற்பனையாகிறது. பன்னீர் திராட்சை விளைச்சல் பாதித்தாலும், கோடை காலம் என்பதால் நுகர்வு அதிகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. காரணம், விவசாயிகளிடம் மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒரு கிலோ பன்னீர் திராட்சையை வெளி மார்க்கெட்டில் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்கின்றனர்.
அதே சமயம், பச்சை திராட்சை விலை மலிவாக கிடைப்பதால் பன்னீர் திராட்சைக்கு கிராக்கி குறைந்துள்ளது. அதனால் விலை வீழ்ச்சி அடைந்து ள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை கொடுத்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். எதிர்பார்த்த விலை கிடைக்காததால் திராட்சை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து திராட்சை விவசாயிகள் கூறியதாவது: பருவ நிலை மாற்றம் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக பன்னீர் திராட்சை சாகுபடி வெகுவாக பாதித்துள்ளது. இழப்பை தவிர்க்க திராட்சைக்கு பதிலாக வேறு சில பயிர்களை விவசாயிகள் பயிரிட தொடங்கி விட்டனர். அதனால் பன்னீர் திராட்சை சாகுபடி குறைந்துள்ளது. தற்போது சில இடங்களில் இருந்து மட்டுமே பன்னீர் திராட்சை விற்பனைக்கு வருகிறது. கோடையில் நுகர்வு அதிகம் இருக்கும், நல்ல விலை கிடைக்கும் என காத்திருந்த விவசாயிளுக்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது.
வெளி மாநிலங்களில் இருந்து தினமும் டன் கணக்கில் பச்சை திராட்சை விற்பனைக்கு வருகிறது. இந்த திராட்சை விலை குறைவாக கிடைப்ப தால் பன்னீர் திராட்சைக்கு மவுசு குறைந்துள்ளது. இதனால் விலை சரிவடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்றால் மட்டுமே கட்டுப்படியாகும். ஆனால், பாதி விலைக்கே விற்பனையாவதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.