வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: குடியரசுத் தலைவர் முர்மு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்பு


போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டோர் பஹ்கேற்றனர்.

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவுடன் இருந்தார். இதற்காக அவர் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 21-ம் தேதி போப் பிரான்சிஸ் தனது 88-வது வயதில் காலமானார்.

இதையடுத்து கடந்த 22-ம் தேதி அவரது உடல் புனித பீட்டர் சதுக்கத்தில் வைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக போப் பிரான்சிஸ் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் அஞ்சலி செலுத்தினர். இதனால் புனித பீட்டர் சதுக்கம் நிரம்பி வழிந்தது.

பின்னர் நேற்று மாலையுடன் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதையடுத்து போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்ட பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு வாடிகன் நகரில் தொடங்கியது. அவரது உடலுக்கு பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து கிறிஸ்துவ பேராயர்கள் பங்கேற்றனர். மேலும், இறுதிச் சடங்கில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் சார்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

குடியரசுத் தலைவர் முர்முவுடன், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன், தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோரும் நேரில் சென்று போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

x