ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து: 115 பேர் படுகாயம் - மக்கள் பதற்றம்!


பந்தர் அப்பாஸ்: தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸில் உள்ள ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் இன்று மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் குறைந்தது 115 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

இந்த பயங்கர வெடி விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், ஈரான் அமெரிக்காவுடன் ஓமனில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையைத் தொடங்கிய நிலையில் இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளதால் பெரும் சலசலப்பு உருவாகியுள்ளது.

"ஷாஹித் ராஜேய் துறைமுக பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல கொள்கலன்கள் வெடித்ததே இந்த சம்பவத்திற்கான காரணம். நாங்கள் தற்போது காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகிறோம்" என்று அரசு அதிகாரி ஒருவர் அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

தீயை அணைப்பதற்காக துறைமுகத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாகவும், அதிக எண்ணிக்கையிலான துறைமுக ஊழியர்கள் பணியாற்றுவதால் இந்த வெடி விபத்து சம்பவத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் அல்லது உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் பல கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கட்டிடங்களில் ஜன்னல்கள் உடைந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன. இந்த வெடி விபத்தை தொடர்ந்து மிகப்பெரிய புகை மூட்டம் உருவாகும் காட்சிகள் ஆன்லைனில் பகிரப்பட்டு வருகின்றன.

x