3,935 காலி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: ஜூலை 12-ல் நடக்கிறது


டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வுக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதன்மூலம் 3,935 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் உட்பட பல்வேறு பதவிகளில் 3,935 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்றே தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் மே மாதம் 24-ம் தேதி ஆகும்.

எழுத்துத் தேர்வு ஜூலை 12-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. குருப்-4 தேர்வு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "அரசு துறைகள் மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து காலியிடங்களின் எண்ணிக்கை கூடுதலாக பெறப்படும்பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும்" என கூறியுள்ளார்.

பதவிகள் விவரம், கல்வித்தகுதி, வெவ்வேறு பதவிகளுக்கான வயது வரம்பு, தேர்வுக் கட்டணம், ஆன்லைன் விண்ணப்ப முறை, பாடத்திட்டம் உள்ளிட்ட முழு விவரங்களையும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) விரிவாக தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

x