தஞ்சாவூர்: மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையைவிட குறைந்த விலைக்கு உளுந்து, பச்சைப் பயறு ஆகியவற்றை வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் கோடை பருவத்தில் 36,279 ஏக்கரில் உளுந்து, பயறு சாகுபடி விதைக்கப்பட்டு, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஏக்கருக்கு சராசரியாக 3 குவிண்டால் வரை உளுந்து மகசூலாகி வருகிறது.
அறுவடை செய்த உளுந்து, பயறு ஆகியவற்றை விற்பனை செய்ய பெரும்பாலும் வியாபாரிகளை விவசாயிகள் நம்பியிருக்க வேண்டியுள்ளது. இதை வியாபாரிகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி, மத்திய அரசு நிகழாண்டு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ உளுந்து ரூ.74, பச்சைப் பயறு ரூ.86.82 என விலை நிர்ணயித்துள்ள நிலையில் இதற்கும் குறைவாக கிலோ உளுந்து ரூ.65-க்கும், பச்சைப் பயிறை ரூ.68-க்கும் கேட்கின்றனர். இதுமட்டுமின்றி தரம் குறைவாக இருப்பதாக கூறி வியாபாரிகள் சிலர் கொள்முதல் செய்ய மறுப்பதால், வேறு வழியின்றி கிடைத்த விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து மானாவாரி விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் து.வைத்திலிங்கம் கூறியது: மானாவாரி பகுதியிலும், சம்பா, தாளடி சாகுபடிக்கு பின்னரும் உளுந்து, பயறு, தட்டைப் பயறு ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்தனர். மகசூல் அதிகமாக இருந்தாலும் அவற்றை சுத்தம் செய்து விற்பனைக்குக் கொண்டு செல்ல விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். தூசி, பழுப்பு நிறமின்றி தரமானதாக கொண்டு சென்றாலும், வியாபாரிகள் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாக கேட்கின்றனர்.
அதிகளவில் விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் என்று கருதாமல், விவசாயிகள் எவ்வளவு கொண்டு வந்தாலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள் முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், வயலில் பாடுபட்ட விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்கும் என்றார்.
இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் கூறியது: விவசாயிகளிடம் நாங்கள் கொள்முதல் செய்தாலும், அதை உள்ளூர் வியாபாரிகளிடம்தான் விற்க வேண்டி உள்ளது. தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத்துக்கு தகவல் கொடுத்துள்ளோம். அவர்கள் வந்தால் குறைந்தபட்ச ஆதார விலைக்குக் குறைவாக கொள்முதல் செய்யமாட்டார்கள். விவசாயிகள் அதிகளவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வந்து விளைபொருட்களை விற்றால்தான், வியாபாரிகள் எங்களை நாடி வருவர் என்றனர்.