சோளிங்கர்: கல்லாலங்குப்பம் தடுப்பணை சேதமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் சேஷாச்சலம் வனப்பகுதியில் உற்பத்தியாகும் நீவா நதி எனும் பொன்னை ஆற்றில் இருந்து வேலூா், ராணிப் பேட்டை மற்றும் திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள 129 ஏரிகள் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவ மழையின் போது பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பொன்னை ஆற்றில் இருந்து, பிரதான கிளை கால்வாய் மூலம் ஏரிமுன்னூா், ரெண்டாடி கல்லாலங்குப்பம் வழியாக மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான பெருங்காஞ்சி ஏரிக்கு தண்ணீா் சென்று முழு கொள்ளவை எட்டியது.
அப்போது, பொன்னை ஆற்றில் இருந்து பெருங்காஞ்சி ஏரிக்கு தண்ணீா் செல்லும் பிரதான கால்வாயின் குறுக்கே சோளிங்கர் அருகே கல்லாலங்குப்பம் கிராம எல்லையில், தளவாய்பட்டறை செல்லும் சாலை மேம்பாலத்தின் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணை வெள்ளத்தில் சேதமடைந்தது. இதனால், நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தடுப்பணை சேதமடைந்தது குறித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரை ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதாக தெரிவித்தனர்.
இருப்பினும், தடுப்பணையை சீரமைக்கும் பணி இதுவரை நடைபெறவில்லை. எனவே, தடுப்பணையில் தண்ணீா் தேக்கி வைத்தால் அப்பகுதி நிலத்தடி நீா்மட்டத்தை பாதுகாக்க முடியும். எனவே, சேதமடைந்த தடுப்பணையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.