ஓடிடி கோதாவில் குதிக்கும் மத்திய அரசு... புத்தாண்டில் வருகிறது பிரசார் பாரதியின் பிரத்யேக ஓடிடி!


ஓடிடி

மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி சார்பில் அரசுக்கு என பிரத்யேக ஓடிடி தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான செயல்பாடுகள் புத்தாண்டில் நடைமுறைக்கு வர இருக்கின்றன.

களத்தில் இருக்கும் சர்வதேச ஓடிடி தளங்களின் படைப்புகள் மற்றும் அவை குறித்தான புகார்கள் தொடர்பாக மத்திய அரசு கவலை கொண்டுள்ளது. ஓடிடி படைப்புகளுக்கும் தணிக்கையை தீவிரப்படுத்துவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறது. பாலியல் காட்சிகள், தேச ஒற்றுமைக்கு எதிரான படைப்புகள், வன்முறை, வசை சொற்கள் ஆகியவை தொடர்பாக ஓடிடி தளங்களின் சுய தணிக்கைக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரசார் பாரதி

மேலும் இதே ஓடிடி களத்தில் அரசு சார்பில் குதிக்கவும் முடிவானது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரச்சார் பாரதி மேற்கொண்டது. தூர்தர்ஷன் காப்பக இருப்பில் உள்ள படைப்புகளுக்கு அப்பால் பிரத்யேகமான புதிய படைப்புகளை உருவாக்கவும் பிரசார் பாரதி முடிவு செய்தது.

புதிய ஓடிடி தளத்தின் வடிவமைப்பு, மேம்பாடு, செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்காக இ-டெண்டர் வாயிலாக ஒப்பந்ததாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். நவம்பர் 1 அன்று இதற்கான பணிகள் தொடங்கும்.

களத்தில் உள்ள இதர ஓடிடி தளங்களுடன் தனி ஒப்பந்தம் மேற்கொள்வதன் மூலம் அங்கிருந்தும் படைப்புகளை பிரசார் பாரதி மடைமாற்ற உத்தேசித்துள்ளது. இந்தியா மட்டுமன்றி சிங்கப்பூர், மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிலும் டிடி இந்தியாவை அணுகும் வகையில், ஓடிடி தளமான ’யப் டிவி’ உடன் பிரசார் பாரதி கடந்தாண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதே பாணியில் பிரசார் பாரதியின் பிரத்யேக ஓடிடி தளமும் செயல்படும்.

பிரசார் பாரதி

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, பிரசார் பாரதியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக வழங்கியுள்ள, ரூ2,539.61 கோடியில், புதிய ஓடிடிக்கான பணிகள் சூடுபிடித்துள்ளன. களத்தில் இருக்கும் ஓடிடி தளங்களை குறைசொல்வதோடு நிறுத்திக்கொள்ளாது, பொழுதுபோக்கில் சமரசம் இல்லாது ஆக்கபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் ஒரு ஓடிடி தளத்தை முன்னெடுக்க பிரசார் பாரதி முடிவு செய்துள்ளது.

x